ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது, திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு (டிடிடி) வழங்கப்பட்ட நெய்யில், ‘கழிவறை சுத்தம் செய்யும் திரவம்’ உட்பட பல கலப்படப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்ததாக முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி உள்ளார்..
கர்னூல் மாவட்டத்தில் உள்ள யெம்மிக்கனூர் வட்டாரத்தின் கழுகுட்லா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது சந்திரபாபு நாயுடு இந்த தகவலை தெரிவித்தார்.. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் டிடிடி-க்கு வழங்கப்பட்ட நெய்யில் பல்வேறு இரசாயனங்கள் கலப்படம் செய்யப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினார்..
மேலும் “டிடிடி-க்கு நெய் வழங்கியவர், கழிவறைகளை சுத்தம் செய்யப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் திரவம் உட்பட பல்வேறு ரசாயனப் பொருட்களை வாங்கி, அவற்றை நெய்யில் கலப்படம் செய்யப் பயன்படுத்தியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது,” என்று முதலமைச்சர் கூறினார்.
திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குக் கொழுப்பு இல்லை என்று கூறி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்கள் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் மேலும் குற்றம் சாட்டினார். “தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (NDDB) அறிக்கை, நெய்யில் விலங்குக் கொழுப்பு இருந்ததை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது, அதன் அடிப்படையிலேயே நான் அந்த அறிக்கையை வெளியிட்டேன். சமீபத்திய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையும் அதையே குறிப்பிட்டுள்ளது, மேலும் நெய்யில் பல்வேறு இரசாயனங்கள் கலப்படம் செய்யப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது,” என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
விலங்குக் கொழுப்பு இருந்ததை மறுத்தாலும், திருப்பதி லட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை ஒய்.எஸ்.ஆர்.சி.பி எம்.பி மற்றும் முன்னாள் டிடிடி தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி கூட ஒப்புக்கொண்டார் என்று நாயுடு சுட்டிக்காட்டினார். முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியின் போது, பிரசாதம் தயாரிப்பதற்காக ஸ்ரீசைலம் கோயிலுக்கும் கலப்பட நெய் வழங்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இந்தக் காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களுக்கு கலப்பட நெய் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
மாநில உள்துறை அமைச்சர் வங்கல்புடி அனிதாவும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். திருமலை நெய் கலப்படப் பிரச்சினையில் எதிர்க்கட்சி அப்பட்டமான பொய்களைப் பேசுவதாக அவர் கூறினார். “சி.எஃப்.டி.ஆர்.ஐ, என்.டி.டி.பி, என்.டி.சி.எஸ்.ஐ மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகிய 4 தனித்தனி அறிக்கைகள், திருமலை லட்டில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன,” என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் பொதுவாக கழிவறைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ‘LABSA’ (லீனியர் அல்கைல் பென்சீன் சல்போனிக் அமிலம்) என்ற ரசாயனம் கலப்படத்தில் பயன்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டினார். இது ஒரு கொடிய தெய்வ நிந்தனைக்குச் சமம் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய செயல்கள் மூலம் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துபவர்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவதை உறுதி செய்வது மக்களின் பொறுப்பு என்று கூறி சந்திரபாபு தனது உரையை முடித்தார்.
இதனிடையே, திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இல்லை என்று சிபிஐ தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெளிவாக கூறப்பட்ட பிறகும், தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருவதாகக் கூறி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, முதலமைச்சரை கடுமையாக சாடினார்.
தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷின் இல்லத்திற்குச் சென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர், நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்படவில்லை என்று சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழு திட்டவட்டமாகக் கூறியுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஜெகன் மோகன் ரெட்டி “இரண்டு மத்திய ஆய்வகங்களின் அறிக்கைகளால் ஆதரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில், ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யுடன் தொடர்புடைய யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. லட்டு விவகாரத்தில் பொய்களைப் பரப்பியதற்காக வருந்துவதற்குப் பதிலாக, நாயுடுவும் அவரது பிரச்சார இயந்திரமும் அதை மூடிமறைக்கவும், ஒரு நபர் ஆணையத்தை நியமித்து சிபிஐ அறிக்கையில் குறை காணவும் முயற்சிக்கின்றனர்,” என்று குற்றம் சாட்டினார்.
“அதுமட்டுமின்றி, முன்னாள் டிடிடி தலைவர்களான சுப்பா ரெட்டி மற்றும் பூமனா கருணாகர ரெட்டி ஆகியோர் எந்தத் தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்று கூறி சிபிஐ அவர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது,” என்றும் அவர் கூறினார்.
கடவுளை அரசியலுக்குள் இழுத்ததற்காக நாயுடுவைக் குற்றம் சாட்டிய ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர், சுயநல மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக கடவுளைப் பயன்படுத்தியதற்காக அவரையும், அவரது மகன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரையும் கடுமையாகச் சாடினார்.



