தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு பொறியியல் கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நேற்று (ஜூன் 6) நள்ளிரவில் முடிவடைந்தது. மொத்தம் 3,02,374 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனர் என பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவர்களும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகளும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 168 மாணவ-மாணவிகள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி உள்ளனர்.
இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 102 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மொத்தம் சுமார் 2,42,000 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் இந்த ஆண்டு, மொத்த இடங்களைவிட அதிகமான மாணவர்கள் பொறியியல் படிப்புக்காக விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் 1 லட்சம் முதல் 50 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆண்டு அந்த நிலைமையே மாறிவிட்டது. மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு, பொறியியல் படிப்பின் மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
கலந்தாய்வு குறித்த தற்காலிக அட்டவணை எப்போதும் முன்கூட்டியே வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அப்படி வெளியிடப்படவில்லை. தரவரிசைப் பட்டியலை வெளியிடும்போது, கலந்தாய்வு குறித்த தேதி அறிவிக்கப்படலாம் என்கிறார்கள். ஜூலை முதல் மற்றும் 2-வது வாரத்தில் கலந்தாய்வு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என உயர்கல்வி வட்டாரங்கள் சொல்கின்றன..