சந்தைக்குச் சென்று நாம் வாங்கி வரும் காய்கறிகள் பார்ப்பதற்கு மிகவும் பசுமையாகவும், பளபளப்பாகவும் இருக்கலாம். ஆனால், அந்தப் பளபளப்பிற்கு பின்னால் பூச்சிக்கொல்லிகள், கண்ணுக்குத் தெரியாத தூசு மற்றும் நுண் பூச்சிகள் ஒளிந்திருக்க வாய்ப்புள்ளது. சாகுபடியின் போது விளைச்சலை அதிகரிக்கவும், பூச்சிகள் தாக்காமல் இருக்கவும் தெளிக்கப்படும் ரசாயனங்கள், தண்ணீரில் மட்டும் கழுவினால் முழுமையாக நீங்கிவிடுவதில்லை. வெறும் இரண்டு நிமிடம் குழாய் அடியில் காட்டுவதால் மட்டுமே காய்கறிகள் சுத்தமாகிவிடும் என்று நினைப்பது ஒரு தவறான புரிதல். இதற்கு நம் சமையலறையிலேயே இருக்கும் மலிவான அதேசமயம் வலிமையான ஒரு பொருள் உப்பு.
உப்பு நீர் ஏன் அவசியமானது..?
உப்பை தண்ணீரில் கரைக்கும்போது அது ஒரு அடர்த்தியான கரைசலாக மாறி, காய்கறிகளின் மேற்பரப்பில் படிந்துள்ள ரசாயன எச்சங்கள் மற்றும் அழுக்குகளைத் தளர்த்துகிறது. குறிப்பாக, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் மற்றும் கீரை போன்ற மடிப்புகள் நிறைந்த காய்கறிகளில் சிறிய பூச்சிகள் மற்றும் புழுக்கள் ஒளிந்திருக்கக்கூடும். உப்பு நீர் இந்த இடுக்குகளுக்குள் ஊடுருவி, அங்குள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது. இருப்பினும், இது மேற்பரப்பில் உள்ள நச்சுகளை மட்டுமே நீக்கும்; காய்கறியின் உட்புறம் வரை சென்ற ரசாயனங்களை முழுமையாக அகற்றாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சுத்திகரிக்கும் முறை :
காய்கறிகளை உப்பு போட்டுச் சுத்தம் செய்வதற்கு என்று ஒரு முறையான வழிமுறை உள்ளது. முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு சுமார் 1 முதல் 2 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். காய்கறிகளை நேரடியாக இந்த நீரில் போடுவதற்கு முன், சாதாரண நீரில் ஒருமுறை அலசி மேலே ஒட்டியுள்ள மண்ணை நீக்கிவிட வேண்டும். பின்னர், காய்கறிகளைத் தயாரித்து வைத்துள்ள உப்புக் கரைசலில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை முழுமையாக மூழ்க வைக்கவும்.
கவனிக்க வேண்டியவை :
ஊறவைத்த பிறகு, உருளைக்கிழங்கு, வெள்ளரி, கத்திரிக்காய் போன்ற கடினமான தோலுடைய காய்கறிகளை மெதுவாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். இலைகளையும் கீரைகளையும் நீரில் லேசாகக் குலுக்கினால் போதுமானது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உப்பு நீரிலிருந்து எடுத்த பிறகு மீண்டும் ஒருமுறை சுத்தமான ஓடும் நீரில் (Running Water) காய்கறிகளை நன்கு அலச வேண்டும். உப்பு நீரில் ஊறவைத்த உடனேயே அப்படியே சமையலில் சேர்ப்பது தவறானது.
காய்கறிகளை உப்பு நீரில் அதிக நேரம் ஊறவைப்பதை தவிர்க்க வேண்டும்; குறிப்பாக மென்மையான இலைகளை நீண்ட நேரம் ஊறவைத்தால் அவற்றின் சத்துகளும் அமைப்பும் மாறக்கூடும். உப்பு நீர் என்பது ஒரு சிறந்த மேற்பரப்புச் சுத்திகரிப்பு முறையே தவிர, அது ஒரு முழுமையான நச்சு நீக்கி அல்ல. எனவே, தரமான காய்கறிகளைத் தேர்ந்தெடுப்பதோடு, இந்த எளிய சுத்திகரிப்பு முறையையும் வழக்கமாக்கி கொண்டால், ரசாயன கலப்பில்லாத ஆரோக்கியமான உணவை நம் குடும்பத்திற்கு வழங்க முடியும்.



