சிவகங்கை மாவட்டத்தின் மறவமங்கலம் அருகேயுள்ள பொத்தகுடி கிராமம், இன்று தமிழகம் முழுக்க மட்டுமல்லாது, சமூக ஊடகங்களிலும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது. காரணம்.. சிட்டுக்குருவியை காக்கும் கிராமமக்களின் தீர்மானம்.
பொத்தகுடி கிராமத்தில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு 6க்கும் அதிகமான தெருக்கள் உள்ளது. எல்லா ஊர்களையும் போல இந்த தெருக்களில் இருக்கும் தெருவிளக்கிற்கு, ஊரின் இறுதியில் ஒரு மெயின் பாக்ஸ் உள்ளது. இங்கு குருவி ஒன்று கூடு கட்டி உள்ளது. இந்த பெட்டியில் இரண்டு குட்டிகளை அந்த குருவி பொறித்து இருக்கிறது.
அந்த கிராமம் மொத்தத்திற்கும் தெரு விளக்கு போட வேண்டும் என்றால் மொத்தமாக அந்த குருவி கூட்டை கலைக்க வேண்டும். ஆனால் தெரு விளக்கு வேண்டுமா அல்லது குருவி கூடு வேண்டுமா என்றதில் மக்கள் குருவி கூட்டை பாதுகாக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி அங்கு தெரு விளக்கை போடாமல் குருவி கூட்டை மக்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பாதுகாத்து இருக்கிறார்கள்.
சின்னஞ்சிறிய குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம் என்றும், ஊருக்கும் மக்களுக்கும், நன்மை அதிகரித்து, அதிர்ஷ்டம் பிறக்கும் என்று கூறுகின்றனர் அக்கிராம மக்கள். மின் கதிர்கள், செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேடி வந்த சிட்டுக்குருவி இனத்தை, மனிதேயத்தோடு பாதுகாத்து பொத்தகுடி கிராமமக்கள் எடுத்துகாட்டாக விளங்குகின்றனர்.
தீபாவளி போது வெடிக்காமல் சிட்டுக்குருவிகளை காக்க சில கிராமங்கள் முன்பு எடுத்த முடிவுகள் போன்று, இப்போதும் பொத்தகுடி கிராமம் ஒரு புதிய வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது. “குழந்தையை போல குருவி குட்டிகளையும் காக்கும் கிராமம்” என்ற பாராட்டு இவர்களுக்கு உரியது. இந்த கிராமம் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகிறது.
Read more: 8வது நாளாக தொடரும் மோதல்.. கிளஸ்டர் பாம்களை வீசி இஸ்ரேலை கதற விடும் ஈரான்..