1937ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், 24 மணிநேர அவசர தொலைபேசி எண்களை அரசாங்கம் அறிவிக்கும். இதன்படி, சீரற்ற காலநிலை தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அந்த அவசர எண்களை தொடர்புகொண்டு உதவி பெறமுடியும். இந்த உதவி எண்களை அழைக்க நாம் பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. உங்கள் போனில் பேலன்ஸ் இல்லையென்றால் கூட இந்த அவசரகால உதவி எண்களை தொடர்புகொள்ள முடியும்.
யாருக்கு வேண்டுமானாலும் எந்த சமயத்திலும் எமர்ஜென்சி சூழ்நிலை ஏற்படலாம். அந்த சமயத்தில் நாம் பாதிக்கப்படுவதோடு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் குழம்பிப் போயிருப்போம். ஆனால் சரியான தகவலோடும் முன் தயாரிப்புகளோடும் இருந்தால், எந்தவொரு சூழலையும் பிரச்சனையின்றி சமாளிக்கலாம். தீ விபத்தோ அல்லது சாலை விபத்தோ எது நடந்தாலும் அவசர கால உதவிகளுக்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் உலகின் முதல் அவசர தொலைபேசி எண் 999 அறிமுகப்படுத்தப்பட்ட நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன் வரலாறு குறித்து தெரிந்துகொள்வோம்.
அவசர எண், 999, என்பது ஐக்கிய இராச்சியத்திற்கான அதிகாரப்பூர்வ அவசர எண் ஆகும். முதன்முதலில் லண்டன் பகுதியில் கடந்த 1937ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இங்கிலாந்தின் 999 எண் உலகின் பழமையான அவசர அழைப்பு தொலைபேசி சேவையாகும். 1935ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி விம்போல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பெண்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதாவது, இந்த விபத்தின்போது, பக்கத்து வீட்டுக்காரர் தீயணைப்புப் படையினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார், மேலும் வெல்பெக் தொலைபேசி பரிமாற்றத்தால் வரிசையில் நிறுத்தப்பட்டதில் அவர் மிகவும் கோபமடைந்தார். பின்னர், பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது அரசாங்க விசாரணையைத் தூண்டியது.
999 ஐப் பயன்படுத்தும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பஹ்ரைன், பங்களாதேஷ், போட்ஸ்வானா, கானா, ஹாங்காங், கென்யா, மக்காவ், மலேசியா, மொரீஷியஸ், கத்தார், அயர்லாந்து, போலந்து, சவுதி அரேபியா, சிங்கப்பூர், எஸ்வதினி, டிரினிடாட் மற்றும் டொபாகோ, சீஷெல்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யுனைடெட் கிங்டம் மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை அடங்கும். இந்தியாவிலும் விபத்து, இயற்கை பேரிடர் உள்ளிட்ட அவசர காலங்களில் உதவும் வகையில் பல்வேறு துறைகள் சார்பில் பல்வேறு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.