தீபம் என்பது மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்கும் மங்களப் பொருட்களில் ஒன்றாகும். சிவபெருமானை வேண்டி அன்னை பார்வதி தேவி தவம் இருந்து, அவரது உடலில் பாதியாக இடம்பிடித்த நாள் என்பதால், கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கேற்றி வழிபடுவது சிவசக்தி அருளைப் பெறுவதற்கான அற்புதமான வழியாகச் சொல்லப்படுகிறது. இந்த நாளில் இறைவனை ஒளி வடிவமாக வழிபடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பையும் நன்மைகளையும் பெற முடியும் என்பது ஐதீகம்.
கார்த்திகையின் ஆன்மீக பலன்கள் :
கார்த்திகை தீபத் திருநாள் என்பது சிவ வழிபாட்டிற்கு மட்டுமின்றி, செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியை வழிபட்டு, அவரின் அருளை முழுவதுமாகப் பெறுவதற்குரிய சக்தி வாய்ந்த நாளாகும். எனவே, இந்த நாளில் நாம் கவனக்குறைவாகச் செய்யும் சில தவறுகள் நமக்குக் கெடுதலை ஏற்படுத்தி, இறைவனின் கோபத்திற்கும் ஆளாக்கிவிடும். மகாலட்சுமி மனம் மகிழும் விதமாக இந்த நாளில் நாம் தவிர்க்க வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கார்த்திகை தீபத்தன்று செய்யக் கூடாத 3 தவறுகள் :
வீட்டை இருளாக வைத்திருக்கக் கூடாது : கார்த்திகை தீபத் திருநாள் அன்று எந்த காரணத்திற்காகவும் வீட்டை விளக்கேற்றாமல் இருளாக இருக்கும்படி செய்யக் கூடாது. நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தாலோ அல்லது ஆன்மிகப் பயணம் செல்வதாக இருந்தாலோ கூட, அருகில் இருப்பவர்கள் அல்லது உறவினர்கள் யாரையாவது வீட்டில் இருக்கச் செய்து விளக்கேற்றச் செய்யலாம். வீட்டுக்குள் விளக்கேற்ற முடியாத சூழல் இருந்தாலும், நிலை வாசலில் மட்டுமாவது இரண்டு அகல் விளக்குகள் கட்டாயம் எரியும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அசைவம் சாப்பிடுதலைத் தவிர்க்க வேண்டும் : கார்த்திகை தீபத்தன்று முழுமையாக விரதம் இருப்பது மிகவும் சிறப்புக்குரியது. விரதம் இருக்க முடியாதவர்கள், சைவ உணவை மட்டும் சாப்பிட்டு இறை வழிபாட்டினை மேற்கொள்ளலாம். மறந்தும் கூட இந்த நாளில் அசைவ உணவுகளைச் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது. இது மிகப்பெரிய பாவமாகக் கருதப்படுகிறது.
கடன் வாங்குதலை தவிர்க்கவும் : கார்த்திகை திருநாள் மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கான நாள் என்பதால், இந்த நாளில் யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. மளிகைக் கடை அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வாங்கினாலும், பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டுமே தவிர, கடனாக ஒருபோதும் வாங்கக் கூடாது. மகாலட்சுமி மனம் மகிழும் படியான விஷயங்களை மட்டுமே இந்த நாளில் செய்வது செல்வச் செழிப்பை அதிகரிக்கும்.



