புகையிலையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டின்படி, இந்தியாவில் மட்டும் 27 கோடி பேர் புகைக்கின்றனர். 13 முதல் 15 வயது வரையிலான ஐந்தில் ஒரு பங்கு மாணவர்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புகையிலை 25 வகையான நோய்களையும், சுமார் 40 வகையான புற்றுநோய்களையும் உண்டாக்கும்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகளவில் 13-15 வயதுக்குட்பட்ட 37 மில்லியன் குழந்தைகள் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். இந்த நாள் புகையிலை பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக WHO ஆல் தொடங்கப்பட்ட ஒரு உலகளாவிய முயற்சியாகும். உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் தேதி, கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை அறிய தொடர்ந்து படியுங்கள்.
இந்த நாள் 1987 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் (WHO) நிறுவப்பட்டது. புகையிலை பயன்பாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், புகையிலை நுகர்வைக் குறைப்பதற்கான கொள்கைகளை ஆதரிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல் அதிகாரப்பூர்வ அனுசரிப்பு 1988 இல் நிகழ்ந்தது.
இந்த நாள் பொது சுகாதாரக் கல்விக்கான ஒரு சக்திவாய்ந்த தளமாக செயல்படுகிறது. உலகளவில் தடுக்கக்கூடிய மரணங்களுக்கு புகையிலை பயன்பாடு முக்கிய காரணங்களில் ஒன்றாகும், இது ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளுக்கு காரணமாகிறது. புகையிலை பயன்பாட்டை நிறுத்துவதை ஊக்குவிக்கவும், எதிர்கால சந்ததியினரை புகையிலையின் உடல்நலம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கவும் இந்த நாள் அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை ஊக்குவிக்கிறது.
WHO இன் கூற்றுப்படி, 2025ம் ஆண்டின் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் “”உளர்ந்த தயாரிப்புகள். இருண்ட நோக்கங்கள். ஈர்ப்பை வெளிப்படுத்துதல்” (“Bright products. Dark intentions. Unmasking the Appeal”) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பு, புகையிலை மற்றும் நிக்கோட்டின் பொருட்கள் இளம் தலைமுறையினருக்கு ஈர்க்கக்கூடிய வடிவமைப்புகள், சுவைகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் அவர்களை ஏமாற்றி, அவர்களின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கங்களை வெளிப்படுத்துகிறது.
புகை பிடிப்பதினால் புற்றுநோய், கண், நுரையீரல் என உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படும். மேலும் தோலின் தன்மை மாறி சுருக்கம் ஏற்படும். இதனால் இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போல் காணப்படுவார்கள். அதுபோல வாய் துர்நாற்றம், இருமல், மஞ்சள் நிறத்தில் பற்கள் மற்றும் ரத்த சோகையை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
புகையிலை எதிர்ப்பு தினம் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் மீது புகையிலையின் அழிவுகரமான தாக்கத்தை நினைவூட்டுகிறது. புகைப்பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிட ஊக்குவிப்பதும், இளைஞர்கள் புகைபிடிப்பதை தொடங்குவதைத் தடுப்பதும் இந்த தினத்தின் நோக்கமாகும். புகையிலை கட்டுப்பாட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம், இது தொடர்பான நோய்களின் சுமையை குறைப்பதோடு, ஆரோக்கியமான சமூகத்தை மேம்படுத்தலாம்.
புகைபிடிப்பதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? “பொதுவாக 40 வயதுக்குள் ஒருவர் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டால், அவரது ஆயுள் 10 வருடங்கள் கூடும் என்று கூறப்படுகிறது. மேலும், “அதுவே ஒருவர் 40 வயதுக்கு மேல் புகைப்பழக்கத்தைக் கைவிட்டால், அவரது உடலில் புகையால் ஏற்பட்ட பாதிப்புகள் 90% குறையும், ஆனால் அவரது ஆயுள் நீளும் என்று சொல்ல முடியாது,” பொதுவாக, புகைபிடிப்பதால், புற்றுநோய், மாரடைப்பு ஆகியவை ஏற்படும் என்றுதான் பலரும் பொதுவாக நினைப்பார்கள். ஆனால், புகைபிடிக்கும் ஒருவரது சுவை உணரும் திறன், உடல் நாற்றம், பற்களின் நிறம் முதற்கொண்டு பல விஷயங்களையும் புகைப் பழக்கம் பாதிக்கிறது, தொடர்ந்து புகைபிடிப்பவர் அப்பழக்கத்தைக் கைவிடும்போது இந்தப் பிரச்னைகள் உடனடியாகவும் படிப்படியாகவும் குறைகின்றன,
இன்றைய நிலையில் பதின்மவயதினர் இத்தகையை பாதிப்புகளுக்கு ஆளாவதை தடுக்க அனைவரும் முன் நிற்க வேண்டும். புகையிலை பயன்பாட்டில் (பாக்கு, பான் மசாலா, கஞ்சா, சிகரெட், பீடி) எல்லா பொருள்களுமே மோசமான தாக்கத்தை உண்டு செய்யும் என்பதை சிறுவயது முதலே சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். பெற்றோர்களில் தொடங்கி பள்ளிக்கூடங்கள், கல்லூரி, சமூகம், அரசு, விளம்பரங்கள் வாயிலாக போதுமான விழிப்புணர்வு அளிக்க வேண்டும். புகையிலை பொருள்கள் என்றாலே அது வாழ்க்கையை சீரழிக்கும் என்னும் அச்சத்தை வளரும் போதே குழந்தைகள் மனத்தில் பதிய வைக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் இளைய வயதிலும் இத்தகைய மோசமான பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த மாட்டார்கள். பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு, மருத்துவர்கள் என ஒட்டுமொத்த சமூகமும் இணைந்தால் மட்டுமே இதற்கான விழிப்புணர்வை அதிகரிக்க முடியும்.