முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் இன்று!. கல்லக்குடியிலிருந்து கல்லறைவரை; இடைவிடாத போராட்டத்தின் கதை!

Kalaignar Karunanidhi 11zon

முத்துவேல் கருணாநிதி என்ற ஒரு பெரும் வரலாறு, ஒரு தலைமுறையின் அடையாளம் . இதுவரை எந்த அரசியல்வாதியும் நிகழ்த்தாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். ஆயிரம் விமர்சனங்களுக்கு மத்தியிலும் மறைக்கமுடியா உதய சூரியனாய் ஜொலித்தவர் கலைஞர் என்றால் எதிர் அரசியல் புரிபவர்களும் கூட ஏற்றுக்கொள்வார்கள். மக்களுக்கான போராட்டங்களில் துவங்கி மக்கள் நலன் காக்கும் முதலமைச்சர் வரை அவர் சொன்னதும், செய்ததும் பல.


நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருக்குவளை பகுதியில் ஜூன் 3 , 1924ம் ஆண்டு பிறந்த கருணாநிதி அவர்கள் மாணவ பருவம் தொட்டே அரசியலில் முனைப்போடு செயல்பட்டவர். சுதந்திர போராட்டங்கள் மூட்டி வளர்த்த சமூக பற்றின் தீ கலைஞரையும் கூட சுட்டு வார்க்க மறக்கவில்லை. மாணவர் பருவத்திலேயே மாணவர் சங்கம் துவங்கி பத்திரிக்கை நடத்தியது, மாணவர்களை ஒன்று திரட்டி இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியது என புரட்சிகர குழந்தையாகவே வளர்ந்திருக்கிறார் கலைஞர்.

அன்று அவர் மாணவராக துவங்கிய பயணம்தான் 90களில் ஒரு தலைமுறை மாணவர்களையே பள்ளிக்கு அனுப்பியது. படிக்க வைத்தது, அரசு ஊழியர்களாக்கியது. இடஒதுக்கீடு, பஸ்பாஸ், தொழிற்பேட்டைகளை உருவாக்கியது, 1 ரூபாய் அரிசி, பெண்கள் முன்னேற்ற திட்டங்கள் என பல சமூக நல திட்டங்களுக்கு வழிவகுத்தது.

மேலும் 1957, 1960-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது ; அளவிற்கரியது! முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த அவசர பிரகடன நிலையை ‘மிசா’ வை மிரட்சி இல்லாமல் எதிர்கொண்டார். தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான ஆட்சி கலைக்கப்படும் என்று தெரிந்தும்கூட அவசர பிரகடன நிலையை எதிர்த்து குரல் கொடுத்தார். ஆட்சியும் கலைக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட இன்னல்கள் பலவற்றையும் இன்பமாக்கிக் கொண்டார்.

அதிகார வர்க்கத்தினரின் சூழ்ச்சியால் இரண்டுமுறை தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்தார். அதேவேளையில், அநீதிக்கு அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவே திகழ்ந்தார். அதுவே அவரது அரசியல் ஆளுமைக்கு அடித்தளமிட்டது. அதனால் பிற்காலத்தில் இந்திய அரசியல் உலகில் மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுத்தார். அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான முன்னேற்றம், பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை – வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சத்துணவு திட்டத்தில் விரிவாக்கம், சமத்துவபுரம் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற சட்டங்கள் சட்டப்பேரவையில் அரங்கேறின. இந்த சமூகப் போராளியின் சமத்துவத்தை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் பட்டியல் நீளும்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராகயிருந்த பேரறிஞர் அண்ணா 1969ல் மறைந்த பிறகு தி.மு.கழகத்தைக் கட்டிக்காக்கும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் 50ஆண்டுகள் தொடர்ந்து தி.மு.க. வின் தலைவராக இருந்தார். அவரது தொடர் அரசியல் பயணத்தால் சட்டமன்ற வைரவிழா நாயகனானார். இது உலக அரசியலில் யாருக்கும் கிட்டிடாத ஒன்று.

மாநில உரிமைக்கு வித்திட்ட அவர், இந்திய விடுதலை நாளன்று மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றுவதற்கான உரிமையைப் பெற்றுத்தந்தார். அதன்மூலம் பிற மாநில முதலமைச்சர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்தார். இந்திய அரசியலில் தனித்துவம் பெற்றதோடு, உலக அரசியலில் அவர் ஒரு முன்னோடியாக வலம் வந்தார். அரசு வேலைவாய்ப்பில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படும் வகையில் இடஒதுக்கிட்டை நடைமுறைப்படுத்தினார்.

50 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கும் 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் 18 விழுக்காடு தாழ்த்தப்பட்டோருக்கும் 3 விழுக்காடு அருந்ததியருக்கும் 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும் ஒரு விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் சலுகை கிடைக்க வழிசெய்தார். அதன்பயனாக அனைத்து சாதியினரும் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் அமரும் வாய்ப்பைப் பெற்றனர்.

ஏனெனில், இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதற்கு முன்னால், அரசின் உயர் பதவிகளை உயர் சாதியினரே ஆக்கிரமித்து வைத்திருந்தனர். அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி என்றால் அது மிகையாகாது! ஒரு காலத்தில் இந்திய குடிமைப் பணியான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர்பதவிகளில் அமர்வது என்பது உயர் பிரிவனரைத் தவிர்த்து, மற்றவர்களுக்கு அது எட்டாக் கனியாக இருந்தது. அக்கனிகளை அனைத்துப் பிரிவனரும் பறித்துக்கொள்வதற்கும் சுவைப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தவர்தான் இந்த சமூகப் போராளி!

அது மட்டுமின்றி ; நீதித்துறையில் பலரும் மிளிர்வதற்கு ஒளி தந்தவர். விமர்சனங்களைக்கண்டு அஞ்சாதவர். அவற்றை அறிவுப்பூர்வமாக எதிர்கொண்டவர். ஆயினும் தனிப்பட்ட முறையில் அவரை தாக்கியவர்கள் தமிழக அரசியலில் பலருண்டு. அப்படிப்பட்டவர்களையும் விழா நிகழ்ச்சிகளில் கண்டால் இன்முகத்துடன் நலம் விசாரிப்பவர் கருணாநதி. அந்தளவுக்கு வியக்கவைக்கும் உயரிய பண்பை அதிகம் பெற்றவர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்றுத்தந்தவர். பெண்களுக்கு அரசுப் பணியில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்க வழிசெய்தவர். கைம்பெண்களுக்கு (விதவை) மறுமண உதவித் திட்டங்களை அளித்தவர்.

பெரியாரின் சீடர்களாக இருந்த அண்ணாவும், கலைஞரும் பிரிந்து வந்து திமுகவை தொடங்கி முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை தமிழகத்தில் அமைத்தனர். அன்று தொட்டு இன்று வரை தமிழகம் கண்ட மாற்றங்கள் பல. குடும்ப அரசியல், வாரிசுகளுக்கு முன்னுரிமை, ஊழல் குடும்பம் என ஓராயிரம் விமர்சனங்கள் கலைஞர் மீதும் தற்போதைய முதல்வரான அவரின் மகன் ஸ்டாலின் மீதும் இல்லாமல் இல்லை. இதை தாண்டியும் அவர்களை ஆட்சியில் அமர வைக்கும் நம்பிக்கைக்குரிய மக்கள் இன்னும் இருக்கின்றனர்.

அதன் முக்கிய காரணம் கலைஞர் என்று கூறப்படுகிறது. 80, 90 களில் கலைஞர் கொண்டு வந்த பல சமூக நலன் சார்ந்த திட்டங்கள் ஒரு தலைமுறையின் தலையெழுத்தையே மாற்றியதாக இன்றும் பெருமையாக சொல்பவர்கள் பலர் உள்ளனர். அரை நூற்றாண்டு தமிழகத்து அரசியலை இடைவிடாது ஆக்கிரமித்திருந்தவர் கலைஞர் கருணாநிதி. 13 முறை தமிழ்நாட்டின் தோல்வியே இல்லாத சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை தமிழ்நாட்டின் சிறப்பான முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அது மட்டுமின்றி பல தலைமுறைக்கும் நிலைத்து நிற்கும் கலை இலக்கிய பணிகளையும் சத்தமில்லாமல் சமூகத்திற்கு விட்டு சென்றிருக்கிறார்.

அரசியல் வாழ்க்கையில் அவர் மீது எத்தனையோ விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தாலும், அவர் கொண்டு வந்த பல நல்வாழ் திட்டங்கள் சாமானிய மக்களின் வாழ்வை மேம்படுத்தியது என்பதே நிதர்சனம். திரையில் துவங்கிய பயணம் எத்தனையோ கரைகளை கண்டுள்ளது. அவரது அரசியல் பயணத்தில் நிறைகளும் உண்டு ; குறைகளும் உண்டு. அவற்றில் குறைகளைவிட நிறைகளே அதிகம். கல்லக்குடியில் தொடங்கிம அவரது போராட்டம் கல்லறையில் அடக்கமாகும்வரை தொடர்ந்தது. அவருக்கான இறுதிகால சட்டப் போராட்டமும் வெற்றிகண்டது.

2023 ஆம் ஆண்டு சூன் திங்கள் மூன்றாம் நாளான இன்று முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். மேலும் 2018 ஆகத்து ஏழாம் நாள் இயற்கை அவருக்கு ஓய்வளித்தது. ஆயினும், ஓய்வுக்கே ஓய்வுக்கொடுத்த ஓய்வறியா சமூகப் போராளி கருணாநிதியின் சமூகநீதிக்கான குரல் மட்டும் தமிழ் நாடெங்கும் ஓயாமல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

Readmore: அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கா..? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..? வாங்க பார்க்கலாம்..

KOKILA

Next Post

சீமானுக்கு அதிர்ச்சி... நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக சேலம் மாநகர் மாவட்ட தலைவர் அறிவிப்பு...!

Tue Jun 3 , 2025
நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன் விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தனர். அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி […]
seeman 2025

You May Like