இந்திய அரசால் தமிழ் மொழியை செம்மொழியாய் அறிவிக்கப்பட்டு இன்றுடன் 19ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவை பொருத்தமட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இந்த நிலையில்தான் ’தமிழை’ செம்மொழியாக கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மொழியின் பழமை, கிளைமொழிகளின் தாய்மொழி, பிறமொழிகளை சாராது, இலக்கிய இலக்கண வளம் உள்ளிட்ட 11 கோட்பாடுகள் செம்மொழிக்கான தகுதிகளாக பார்க்கப்படுகின்றன. இத்தகைய தகுதிகளை கொண்ட தமிழை, செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று 1902 ஆம் ஆண்டு பரிதிமாற் கலைஞர் முதன்முதலில் குரல் எழுப்பினார்.
அதனை தொடர்ந்து தமிழறிஞர்கள், தலைவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. அதன் விளைவாக, தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்திய அரசால் செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி ’தமிழ்’ ஆகும். இதனையடுத்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளும் இந்தியாவின் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்ததை கொண்டாடும் வகையில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு ’செம்மொழி’மாநாட்டை கோவையில் நடத்தியது.
Readmore: சாப்பிட்டவுடன் இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்!. நிபுணர்கள் கூறும் அறிவுரை!