ஆடி முதல் நாள் வழிபாட்டை எந்த நேரத்தில், எப்படி துவங்க வேண்டும், அம்மனை எப்படி வீட்டிற்கு அழைக்க வேண்டும், கலசம் வைத்து வழிபடுபவர்கள் எப்படி வழிபட வேண்டும், குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை எப்படி வீட்டிற்கு அழைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் மாதங்களில் மாதம் முழுவதிலும் திருவிழாவாக கொண்டாடப்படும் மாதம் என்றால் அது ஆடி மாதம் தான். அம்மன் கோவில்கள் மட்டுமின்றி, சிவன் கோவில், பெருமாள் கோவில் என அனைத்து கோவில்களிலும் இந்த மாதம் முழுவதும் விழாக் கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி புதன்கிழமை ஆடி மாதம் துவங்குகிறது. இந்த நாளில் அம்மனையும், குலதெய்வத்தையும் வீட்டிற்கு அழைத்து வழிபட வேண்டும். இதனால் வீடும் நம்முடைய வாழ்வும் ஆண்டு முழுவதும் சுபிட்சமாக இருக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் நாம் மேற்கொள்ளும் வழிபாடு, அடுத்த 11 மாதங்களுக்கும் அம்மனின் அருளால் நம்முடைய வாழ்க்கை சிறந்திருக்க செய்யும்.
வியாழக் கிழமையான இன்று ஆடி முதல் நாள் என்பதால், அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து, பூஜைக்கு தயாராகலாம். பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை சுத்தம் செய்து, பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். முதலில் வாசல் தெளித்து கோலமிட்ட பிறகு, நிலை வாசலுக்கு சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். நிலைவாசலில் மாவிலையுடன் வேப்பிலை கலந்து தோரணம் கட்ட வேண்டும். பிறகு கலசம் வைத்து, அந்த கலசத்திற்கு குலதெய்வத்தையும் அம்பிகையையும் எழுந்தருள செய்து, வீட்டிற்கு அழைக்க வேண்டும். குலதெய்வம் எது என தெரியாதவர்கள் அன்னை காமாட்சியையே குலதெய்வமாக நினைத்து வீட்டிற்கு அழைத்து வழிபடலாம்.
நிலை வாசலில் விளக்கேற்றிய பிறகு, வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். கலசத்தில் தண்ணீர் வைத்து வழிபடுபவர்கள், சொம்பில் தண்ணீர் நிரப்பி, அதில் சிறிது வாசனைப் பொடி சந்தனம், குங்குமம், ஒரு ரூபாய் நாணயம், ஒரு எலுமிச்சம் பழம் போட்டு, அதன் மீது மஞ்சள் பூசி தேங்காய் வைத்து கலசம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் நூல் சுற்றத் தெரிந்தவர்கள் சுற்றலாம். தெரியாதவர்கள் சொம்பின் கழுத்து பகுதியில் மஞ்சள் நூலை மட்டும் சுற்றி வைக்கலாம். கலசத்தில் தண்ணீர் வைத்து வழிபடுபவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அந்த தண்ணீரை மாற்றி விடலாம். அரிசி வைத்து வழிபடுபவர்கள், ஆடி மாதம் முழுவதும் வைத்து வழிபடலாம்.
வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை வைத்து, “தாயே எங்கள் வீட்டில் எழுந்தருளி எங்களின் பூஜைகளை ஏற்றுக் கொண்டு எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்” என மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்மன் மிக எளிமையான தெய்வம். அவளுக்கு பிடித்த சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் பரவ விட வேண்டும். நைவேத்தியமாக அம்மனுக்கு சர்க்கரை பொங்கல், பருப்பு பாயசம், கூழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை படைத்து வழிபடலாம். முடிந்தவர்கள் தாம்பூலம் வைத்தும், ரவிக்கை, வளையல் போன்ற மங்கள பொருட்கள் வைத்தும் வழிபடலாம். அதோடு மாலையில் அருகில் உள்ள ஏதாவது ஒரு காவல் தெய்வம், அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.