மத்திய அரசுப் பணியாளர் தேர்வணையத்தின் (எஸ்.எஸ்.சி) ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு 2022க்கு விண்ணப்பிக்க இன்றை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தென்மண்டல பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2022 (நிலை-1) கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டிஇபி போன்ற பதவிகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு 4,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன.
தேர்வர்கள் ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இன்றைய கடைசி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காத நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் புகைப்படத்தில் தொப்பியோ, கண்ணாடியே அணிந்திருக்கக்கூடாது. அவர்கள் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும்.
தென்னக பகுதிகளில் கணினி மூலம் நடைபெறும் இந்த தேர்வு 22 மையங்களில் பிப்ரவரி – மார்ச் 2023-ல் நடைபெறுகிறது. ஆந்திரா மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 8 மையத்திலும், தெலங்கானாவில் 3 மையங்களிலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.