முருக பக்தர்களால் உலகமெங்கும் மகிழ்வோடு கொண்டாடப்படும் வைகாசி விசாக திருநாள், இந்தாண்டு ஜூன் 9ம் தேதி திங்கள் கிழமை அன்று விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த நாளை முன்னிட்டு திருத்தலங்களில் திரளான பக்தர்கள் பால் குடம், காவடி, பாத யாத்திரை, தேர் இழுக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டு, தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள்.
வைகாசி மாதத்தில், விசாகம் நட்சத்திரம் வரும் நாளே முருகப் பெருமான் பூமியில் அவதரித்த திருநாளாக கருதப்படுகிறது. மயிலின் மீது ஏறி வரும் தன்மையால் “விசாகன்” என்றழைக்கப்படும் முருகன், தனது பக்தர்களை காத்தருளும் தெய்வம் என நம்பப்படுகிறது. “முருகா” என்று அழைத்தால் வந்த வினையும், வருகின்ற வல்வினையும் ஓடிவிடும்” என நம்பப்படுகிறது.
முருகனை வழிபட்டால் அவரது அருளுடன், சிவபெருமானின் ஐந்து முகங்களும், தாய் பார்வதி தேவியின் சக்தியும் ஒரே நேரத்தில் கிடைக்கும் என ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. குழந்தை இல்லாத தம்பதிகள், கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை இன்மை, தொழிலில் தடைகள், நீண்டநாள் நோயால் தவிப்பவர்கள், வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் வைகாசி விசாகம் தினத்தில் விரதம் இருந்து முருகனை வணங்கினால், விரைவில் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.
விரத முறை: வைகாசி விசாகத்தன்று அதிகாலையில் எழுந்து, நீராடி, வீட்டில் விளக்கேற்றி, முருகப் பெருமானை வழிபடலாம். அன்றைய தினம் முழு உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் முருகனை நினைத்து, அவருக்குரிய மந்திரங்களை, பாடல்களை பாராயணம் செய்து வழிபடலாம். நைத்தியமாக சர்க்கரைப் பொங்கல், பருப்பு பாயசம், கற்கண்டு கலந்த பால் ஆகியவற்றை படைத்து வழிபடலாம். காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றி வழிபட வேண்டும். அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து வரலாம்.
வழிபாட்டுக்கு சிறந்த நேரம்: வைகாசி விசாக விரதம் இருந்து காலையிலேயே பூஜை செய்ய நினைப்பவர்கள், காலை 6 மணி முதல் 07.20 மணி வரை தங்களின் பூஜையை மேற்கொள்ளலாம். அதற்கு பிறகு 09.30 மணி முதல் 10.30 மணி வரை, பகல் 01.30 மணி முதல் 02.30 மணி வரை ஆகிய நேரங்களை பயன்படுத்தி தங்களின் பூஜையை செய்யலாம். இந்த நேரங்களில் பூஜை செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்து வழிபட்டு, முருகப் பெருமானுக்கு படைக்கும் பிரசாதத்தை உட்கொண்டு, தங்களின் விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
வைகாசி விசாகம் என்பது, பக்தர்கள் மனநிறைவை அடைய, துன்பங்களைத் தூரமாக்க, முருகனின் கருணையை பெறுவதற்கான சிறந்த நாள். அந்த நாளில் முருகனை மனமாற்றமின்றி எண்ணி, அன்போடு வழிபட்டால், அருளும், ஆசீர்வாதமும் நிச்சயம் கிடைக்கும்.
Read more: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6000-ஐ கடந்தது.. 24 மணி நேரத்தில் 6 பேர் பலி..!!