செங்கம் சுங்கச்சாவடிக்கு பணம் செலுத்தாத அரசுப் பேருந்து, ஊழியர்களால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், பயணி ஒருவர் தாமாக முன்வந்து டோல் கட்டணத்தை செலுத்தி பேருந்தை மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, சொந்த பணத்தை கட்டு பயணி ஒருவர் அந்த பேருந்தை மீட்டு பயணத்தை தொடர உதவினார். இதற்கிடையில், சுங்கச்சவாடி (Tollgate) ஊழியர்கள் மற்றும் பயணிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்தான வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்றும், அரசு போக்குவரத்துக்கழகம் உரிய பயணத்தை செலுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
திருவண்ணாமலையில் இருந்து செங்கம் சுங்கச்சாவடி வழியாக அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து கடந்த இரண்டு நாட்களாக பாஸ்டேக்கில் போதிய பணமின்றி திருவண்ணாமலை – சென்னை இடையே இயங்கி வந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் (மே 27) அதேபோல் இயங்கி வந்துள்ளது. அப்போது, இந்த பேருந்தானது, திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, பேருந்து செங்கம் சுங்கச்சாவடி வழியாக வந்தது. இந்நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலர், அந்தப் பேருந்தை திடீரென மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, பேருந்தைவிட்டு கீழே இறங்கிச் சென்ற டிரைவர் மற்றும் நடத்துனரும், போக்குவரத்துக் கழகம் இன்னும் பாஸ்டேக்கில் பணம் செலுத்தவில்லை என்று சுங்கசாவடி ஊழியர்களிடம் கூறினர். மேலும், அடுத்த முறை வரும்போது, முழுமையான தொகையை செலுத்திவிடுவோம் என்று கூறியுள்ளனர்.
ஆனால், இதை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்துக்குள் காத்திருந்த பயணிகள் சிலர் இறங்கி வந்து, தங்களுக்கு அவசரம் என்றும் பேருந்தை விடுமாறும் ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது, பேருந்தை விட மறுத்ததால், பயணிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், செங்கம் சுங்கச்சாவடியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அரசுப் பேருந்து அங்கேயே சிறைபிடிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, சுங்கசாவடி ஊழியர்கள் பயணிகளிடம் உங்களுக்கு அவசரம் என்றால் நீங்கள் பணத்தை கட்டி பேருந்தை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால், பயணி ஒருவர் தாமாக முன்வந்து தன்னுடைய சொந்த பணத்தில் ரூ.400 செலுத்தி, பேருந்தை எடுத்துச் செல்ல உதவினார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், போக்குவரத்துக் கழகத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.