சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன. இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி அங்காடிகளுக்குத் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய உள்ளூர் மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலிருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது. காய்கறிகளின் விலை வரத்தை பொறுத்து நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் தக்காளி விலை திடீர் உயர்வு வரத்து குறைவால் கோயம்பேடு உள்பட நகர சந்தைகளில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோக்கு ரூ.10 உயர்ந்து, மொத்த சந்தையில் கிலோ ரூ.60 அளவுக்கு விற்பனை ஆகிறது; சில்லரை விற்பனையில் கிலோ ரூ.80 என்று விலை நிலவுகிறது.
வியாபாரிகள் கூறுகையில், ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சந்தையில் சப்ளை குறைந்து, விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வரத்து சீராகும் வரை தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். வரத்து சீரானால் விலை குறையும்; இல்லையெனில் அடுத்த சில நாட்களில் கூடுதல் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சந்தை வளாகத் தரப்புகள் தெரிவிக்கின்றன.