நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால், தொற்று பரவல் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதில் இருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்துள்ளது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை கொடுத்தது. கொரோனா பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.
‘ஜேஎன் 1’ எனும் புதிய வகை கொரோனா வைரஸ்தான் இந்த திடீர் பரவலுக்கு காரணம். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், சீனாவிலும், சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. இந்தியாவில் கேரளாவில் முதியவர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில்ம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52% அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் கவலை தெரிவித்திருக்கிறது.
அதாவது கடந்த 28 நாட்களில் மட்டும் 8.5 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்தான். ஆனால், நல்வாய்ப்பாக உயிரிழப்பு 8% குறைந்துள்ளது. ஆனால் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா என உலகின் 70-75 சதவிகித மக்கள் தொகையை கொண்டிருக்கும் வட அரைகோள பகுதியில் இது குளிர் காலம் என்பதால் தொற்று பாதிப்பு சுவாச கோளாறை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே, இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில், முககவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், அதிக அளவில் கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது.