பருவமழை, வெயில் காலங்களில் மாடுகள், கன்றுகளை கானை நோய் என்னும் கோமாரி நோய் கடந்த காலத்தில் அதிகளவு தாக்கியது. இந்த நோயை கவனிக்காமலும், சிகிச்சை அளிக்காமலும் விட்டால் மாடுகளின் உயிருக்கே ஆபத்தை மாறிவிடும். இந்நோயால் மாடுகள் உயிரிழப்பு குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, மாடுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இதனால், ஆண்டுதோறும் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் மாடுகளுக்கும், 4 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகளுக்கும் கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது அக்டோபர் கடைசியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் செப்டம்பர் மாதத்திலேயே தடுப்பூசிகள் போடப்பட்டுவிடும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போட வேண்டிய கோமாரி நோய் தடுப்பு மருந்து மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து கால்நடை துறையினர் கூறுகையில், ‘‘கடந்த 10 ஆண்டாக இந்த நோயைத் தடுக்க மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதம் நோய் வருவதைத் தடுக்க போலி தடுப்பூசி எப்படி போடப்படுகிறதோ அதுபோல், கோமாரி நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக இந்த தடுப்பூசி போடப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த தடுப்பூசியை மாநில அரசு மாடுகளுக்கு போட்டு வந்தது. கடந்த 2021 முதல் மத்திய அரசு தமிழகத்திற்கான தடுப்பூசிகளை வழங்கி வந்தது. செப்டம்பர் மாதம் போடுவதற்கான தடுப்பூசி தற்போது வரை எந்த மாவட்டத்திற்கும் அனுப்பவில்லை’’ என்றனர்.