காடுகளை அழிவிலிருந்து காப்பதற்கும் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை தக்க வைப்பதற்கும் புலிகளின் தேவை இன்றியமையாதது. புலிகளின் இனத்தை பாதுகாப்பதற்கு 2010 முதல் ஜூலை 29ம் நாள் சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. பூனை இனங்களில் பெரிய விலங்கு புலி. தனித்துவமான முகம், கம்பீர நடை, ஆரஞ்சு, வெள்ளை நிறம் கலந்த கருப்பு நிறத்தில் நூற்றுக்கணக்கான வரிகளை உடலில் கொண்டிருக்கும். வெளித்தோற்றத்தில் மிரட்டும் தோரணையும், அச்சுறுத்தும் ஆற்றல் உடையதாக தோன்றினாலும் பழகுவதற்கு அமைதியாகவும் சரியான முடிவெடுக்கும் திறனையும் கொண்டதாகவும் புலிகள் விளங்குகின்றன.
இந்தியா, வங்காளதேசம், மலேசியா, தென்கொரியா ஆகிய நாடுகளில் தேசிய விலங்கு புலி தான். புலிகளை கூட்டமாக காண்பது அரிது. இவை தனிமை விரும்பிகள். மரம் ஏறுதல், நீச்சலடிப்பது, வேட்டையாடி தன்னுடைய உணவுகளை தானே தேடுவது என்று புலிகளை மிஞ்சவே முடியாது. காட்டிற்குள் மனிதர்கள் நடமாட்டத்தை வாசனை மூலமே அறிந்து கொள்ளும். மனிதர்களின் கண்களில் படாமல் இருந்து ஒளிந்து கொள்ளும். ஒரு புலி 32 முதல் 48 கிலோ மீட்டர் சுற்றளவில் தனது எல்லையாகக் கொண்டு, தானே ராஜாவாக வாழும். அவற்றின் எல்லைக்குள் வேறு புலிகள் கால்வைக்க முடியாது. தான் வாழும் இடத்தை சிறுநீரால் எல்லை வகுத்துக் கொள்ளும். புலிகளின் சிறுநீர் மனதை வைத்து அது ஆணா? பெண்ணா? என்பதை மற்ற புலிகள் கண்டுபிடித்துவிடும்.
வனப்பகுதிகளில் மனிதர்கள் நடமாட்டம் அதிகரித்தல் மற்றும் வளங்கள் சுருங்குதல் ஆகிய காரணங்களால் அடிக்கடி, அடிக்கடி மனிதன் வாழும் பகுதிக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுகின்றன. இதனால் மனிதன், புலிகளிடையே மோதல் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கு அதிகமான புலிகள் இருந்தன. அவற்றில் பல், தோல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு உள்ளன. இதன் விளைவாக புலிகள் அழிவின் விளிம்பில் உள்ளன.