பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பு சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மம்தா குமாரி, டெலினா கோங்தூப் ஆகியோருடன் குஷ்புவும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் தான் இவர் பதவியும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், 8 வயதிலேயே தந்தையால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
வி தி வுமன் நிகழ்ச்சியில் மோஜோ ஸ்டோரிக்காக குஷ்பு அளித்த பேட்டியில், “ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.. பெண்ணா பையனா என்பதில் பிரச்சனை இல்லை.. என் அம்மாவுக்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கையே இருந்தது. மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்தவர் தான் அவர். எனக்கு 8 வயதாகும் போது துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார்.
அவருக்கு எதிராகத் துணிச்சலாக நான் பேசிய போது. எனக்கு வயது 15. நான் எனக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்தது. எங்கு நான் ஏதாவது சொன்னால் எனது குடும்ப உறுப்பினர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது. இதனால், பல ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன். நான் இதைச் சொன்னால் எனது அம்மாவே என்னை நம்ப மாட்டாரோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. ஏனென்றால் அவரை பொறுத்தவரை என்ன நடந்தாலும் கணவர் தான் தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே இருந்தார். எனக்கு 15 வயதாகும் போது இனியும் தாங்க முடியாது என்று முடிவு செய்தேன். அவருக்கு எதிராகப் பேச ஆரம்பித்தேன். எனக்கு அப்போது 16 வயது கூட ஆகியிருக்காது. அவர் எங்களை விட்டுச் சென்றார். குழந்தைப் பருவம் எனக்கு மிக மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது. குழந்தையாக இருந்த போது நான் பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்குத் துணிச்சல் வந்தது. என்ன நடந்தாலும் துணிச்சலாகப் போராட வேண்டும் என்ற மனப்பான்மை வந்தது” என்றார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அந்த பொறுப்பில் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. பதவியேற்ற போது அவர் தனது ட்விட்டரில், ” எனது தலைவர் பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியோடு இந்த பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். மேலும், பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் துணிச்சலாகச் சொல்ல வேண்டும் என்றும் அப்போது தான் நீதி கிடைக்கும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.