இந்தியா மட்டுமின்றி, உலகின் அனைத்து இடங்களிலுமே தேநீர் பிரியர்கள் உள்ளனர். பலரும் வெவ்வேறு வழிகளில் தேநீரை குடிக்க விரும்புவார்கள். ஆனால், அதை பரிமாறுவதற்கு ஒரே பொருளை தான் பயன்படுத்துகிறார்கள். அதுதான் தேநீர் கெட்டில். இதன் வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தாலும், அதன் செயல்பாடு ஒன்று தான். தேநீரை சூடாக வைத்து எளிதில் பரிமாற உதவும். ஆனால், உலகில் மிகவும் விலை உயர்ந்த, தேநீர் கெட்டில் ஒன்று உள்ளது. அதன் வடிவமைப்பு மிகவும் தனித்துவமானது. அதன் விலை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த தேநீர் கெட்டிலை பணக்காரர்கள் கூட வாங்க யோசிப்பார்கள்.
இந்நிலையில், இந்த தேநீர் கெட்டில் பற்றி கின்னஸ் உலக சாதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ”இது உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் கெட்டில். இது இங்கிலாந்தில் உள்ள ஆன் செத்தியா அறக்கட்டளைக்கு சொந்தமானது. 18 காரட் மஞ்சள் தங்கத்தால் ஆனது. முழு கெட்டிலும் வெட்டப்பட்ட வைரங்கள் மற்றும் மையத்தில் 6.67 காரட் ரூபி அமைக்கப்பட்டுள்ளது. இதன் கைப்பிடி ஒரு மாமத்தின் புதைபடிவ பல்லில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது“ என்று பதிவிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில், சுமார் ரூ.1500 வரையிலான நல்ல தரமான கண்ணாடி கெட்டில்களை தான் நாம் பார்த்திருப்போம். ஏன் மிகவும் குறைந்த விலையிலான கெட்டில்களும் உள்ளன. ஆனால், இந்த கெட்டிலின் விலை என்ன தெரியுமா..? கடந்த 2016ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, இதன் மதிப்பு 3 லட்சம் டாலர்கள் அதாவது ரூ.24 கோடி. இப்போது அதிகரித்து வரும் பணவீக்கத்தில், அதன் விலை இன்னும் அதிகரித்திருக்கும் என்று கூறப்படுகிறது.