தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளாத்திகுளம் அருகிலுள்ள பல்லாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குருசாமி (40). இவர், தனது சகோதரர் முனியசாமியின் மகன்களான சிறுவர்கள் முகிலரசன் (5), சுமித்ரன் (3), மற்றும் தனது சகோதரி முத்துலட்சுமி (48) மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் பெண் ஆகிய நால்வரையும் அழைத்துக்கொண்டு, விளாத்திகுளத்திலுள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று மாலை மீண்டும் குளத்தூர் நோக்கித் தனது இருசக்கர வாகனத்தில் 5 பேரையும் ஏற்றிக்கொண்டு அவர் புறப்பட்டபோதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.
கிழக்கு கடற்கரை சாலையில் வைப்பார் அருகே இவர்களது வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த சுற்றுலா வேன் ஒன்று, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மின்னல் வேகத்தில் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 5 பேரும் பேரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், 5 பேரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே வாகனத்தில் 5 பேர் பயணித்தது ஒருபுறம் இருக்க, சுற்றுலா வேன் ஓட்டுநரின் கவனக்குறைவு விபத்திற்குக் காரணமா என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



