வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்தியாவின் ரயில் பயணம் சற்று விலை உயர்ந்ததாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புக்களுக்கான கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகரித்து வரும் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகளை ஈடு செய்யும் நோக்கில், கடந்த 2020ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக தற்போது ரயில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கும் என்றும் ஏசி வகுப்பு டிக்கெட்டுகள் கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் பாதிக்கப்படுவார்கள்?. ஜூலை 1ம் தேதிக்கு பிறகு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், திருத்தப்பட்ட கட்டணங்களை செலுத்தவேண்டும். இருப்பினும் சாதாரண பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் இந்த கட்டண உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக கட்டண உயர்வை அரசு தவிர்த்து வருகிறது. பயணிகள் மீது அதிக சுமையை ஏற்படுத்தாமல், உள்கட்டமைப்பை பராமரிப்பதற்கும், பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் இந்த பெயரளவு உயர்வு அவசியம் என்று ரயில்வே அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பயணத் தூரத்தை பொறுத்து இந்த கட்டண உயர்வு இருக்கும். 500 கி.மீ தூரத்திற்கு ஏசி அல்லாத வகுப்பில் பயணிப்பவர்கள் ரூ.5 அதிகமாகவும், ஏசி பயணிகளுக்கு ரூ.10 அதிகமாகவும் செலுத்த வேண்டும். 500 கி.மீ., வரை பயணிக்கும் இரண்டாம் வகுப்பு குறுகிய தூர பயணிகளுக்கு கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. 500 கி.மீ., மேல் உள்ள இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு 1 கி.மீட்டருக்கு அரை பைசா மட்டுமே உயர்த்தப்படும்.
புதிய கட்டணங்களின் கீழ் எந்தெந்த ரயில்கள் சேர்ப்பு?. அனைத்து ரயில்களிலும் கட்டண திருத்தம் செய்யப்படாது.இந்த உயர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட மெயில் மற்றும் விரைவு ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும்.
புதுபிக்கப்பட்ட கட்டண அமைப்பை எவ்வாறு அணுகுவது?. ரயில்வே அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ போர்ட்டல், www.indianrail.gov.in -ல் புதிய கட்டணத்தை தெரிந்துகொள்ளலாம். ஐஆர்சிடிசி வலைதளம் மற்றும் மொபைல் செயலிலும் தகவல்கள் கிடைக்கும். உதவிக்கு, பயணிகள் ரயில்வே உதவி எண் 139ஐ அழைக்கலாம்.
ஜூலை முதல் அமலுக்கு வரும் பிற முக்கிய மாற்றங்கள்: கட்டண திருத்தத்துடன் இந்திய இரயில்வே, ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஆதார் சரிபார்ப்பை அறிமுகப்படுத்துகிறது. புதிய விதியின்படி, ஐஆர்சிடிசி வழியாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பு கட்டாயமாகும்.
ஜூலை 15 முதல் பயணிகளின் அடையாளத்தை அங்கீகரிக்க OTP அடிப்படையிலான ஆதார் சரிபார்ப்பும் கட்டாயமாக்கப்படும். தட்கல் முன்பதிவு முறையை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதும், டிக்கெட்டுகள் உணமையான பயணிகளுக்கு செல்வதை உறுதி செய்வதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
Readmore: “சமுக அநீதி அரசு.. நாசமான 4 ஆண்டுகளை தமிழ்நாட்டிற்கு தந்துள்ளது..” கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா..