பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது..
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. மொத்தம் 5 பேர் வேனில் பயணித்த நிலையில், அவர்களில் 4 பேர் மாணவர்கள் என்றும், ஒருவர் ஓட்டுநர் என்று கூறப்படுகிறது.. பள்ளி வேனில் பயணித்த ஒரு மாணவர், ஒரு மாணவி என இருவர் உயிரிழந்துள்ளனர்.. படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.. விபத்தில் படுகாயமடைந்த செழியன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி செழியன் உயிரிழந்துள்ளார். செழியனின் சகோதரி சாருமதி ஏற்கனவே இறந்த நிலையில், தற்போது செழியனும் இறந்துவிட்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது..
இதனிடையே கேட் கீப்பர் தூங்கியதால் தான் விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. ரயில்வேயின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.. ஆனால் இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வேறொரு விளக்கத்தை அளித்துள்ளது.. அதாவது, கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சித்தபோது, தண்டவாளத்தைக் கடந்து சென்று விடுகிறேன் என ஓட்டுநர் வற்புறுத்திச் சென்றதே விபத்துக்கு காரணம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.. மருத்துவ நிவாரணப் பொருட்களுடன் ஒரு ரயில் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் ரயில்வே கூறியுள்ளது..
மேலும் அந்த ரயில்வே கேட் கீப்பர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அவருக்கு தமிழ் தெரியாததும் விபத்துக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. போலீசார் கேட்கும் கேள்விகள் கூட அவருக்கு புரியவில்லை என்று கூறப்படுகிறது.. தமிழ் தெரிந்த ஒருவரை கேட் கீப்பரை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்..