திருநங்கை தம்பதியினரின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில், ‘பெற்றோர்’ என குறிப்பிட்டால் போதும் என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாற்று பாலினத்தவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கே பல போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். ஒரு குடும்பமாக வாழ விரும்பினாலும், இதில் யார் கணவன்..? யார் மனைவி..? என்கிற கேள்வி எழுகிறது. அதையும் தாண்டி, குழந்தையை தத்தெடுத்து வளர்த்தாலும் கேள்வி எழுகிறது. பாலினங்களில் இரண்டு மட்டுமே இல்லை என்றும் அதை தாண்டி பல பாலினங்கள் இருப்பதாகவும் மாற்றுப்பாலினத்தவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் தான், மாற்றுப் பாலினத்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக கேரள உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, கேரள மாநிலத்தை சேர்ந்த ஜியா பாவல், ஜஹாத் திருநங்கை தம்பதிக்கு கடந்த 2023இல் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கான பிறப்பு சான்றிதழில் தாய் ஜஹாத் என்றும் தந்தை ஜியா பாவல் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து ஜஹாத் தன்னை ஆணாக பார்க்க வேண்டும் என்று உரிமை கோரி வருகிறார்.
இப்படி இருக்கும்போது, தன்னை தாய் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு என்றும், தங்களை வெறும் பெற்றோர் என்று குறிப்பிட்டாலே போதுமானது என்றும் கூறினார். ஆனால், இதனை மருத்துவமனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், திருநங்கை பெற்றோர் கேரள ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் வெறும், ‘பெற்றோர்’ என்று குறிப்பிட்டால் போதும். தாய், தந்தை என குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது.
வழக்கு விவரம் :
ஜஹாத் என்பவர் பிறப்பால் பெண். பின்னர், பருவ வயதில்தான், தான் ஒரு மாற்று பாலினத்தை சேர்ந்தவர் என்பதை உணர்ந்துள்ளார். அதேபோல், ஜியா பாவல் பிறப்பால் ஒரு ஆண். ஆனால், அவரும் திருநங்கை என்பதை பின்னாளில் தான் உணர்ந்தார். பின்னர், இருவரும் அப்படியே வளர்ந்து வந்த நிலையில், இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2023இல் குழந்தை பிறந்தது. திருநங்கை தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது நாட்டிலேயே இதுதான் முதல்முறை. இந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் விவகாரம் தான் தற்போது நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றுள்ளது.