2011ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு காரணமாக அமைந்த சிக்சர் விழுந்த மும்பை வான்கடே மைதானத்தில் அமையவுள்ள நினைவுச் சின்னத்திற்கான பணிகளை தல தோனி தொடங்கி வைத்தார்.
1983ஆம் ஆண்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 276 ரன்கள் இலக்கை இந்திய அணி விரட்டியது. கவுதம் கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்த பின், அப்போதைய இந்திய அணி கேப்டன் தோனி – யுவராஜ் சிங் இருவரும் இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர். இந்த ஆட்டத்தின் முக்கிய தருணமாக இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர் குலசேகரா வீசிய 48வது ஓவரின் 2வது பந்தில் தோனி சிக்சரை விளாசி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி உலகக்கோப்பையை வென்று அசத்தியது. சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக்கோப்பையில், இந்திய அணி வென்று அசத்தியது.
உலகக்கோப்பை என்று நினைத்தாலே இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோனி அடித்த சிக்சரை யாராலும் மறக்க முடியாது. அதன்படி, இந்திய கிரிக்கெட்டின் மகத்தான தருணங்களில் தோனி அடித்த சிக்சருக்கு மிகமுக்கிய பங்குண்டு. இந்த நிலையில் தோனியை கவுரவிக்கும் வகையில், மும்பை வான்கடே மைதானத்தில் அவர் அடித்து சிக்சர் பந்து விழுந்த இடத்தில் தோனிக்கு நினைவுச்சின்னம் அமைக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தோனி தொடங்கிவைத்தார். தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் விளையாடி வரும் தோனிக்கு, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் கொடுத்துள்ள கவுரவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.