ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் முன்னறிவிப்பில்லா போராட்டத்தை நடத்தினர். இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிஐடியூ, அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்யும் விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனையடுத்து சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜூன் 9ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரிவதற்காக தனியார் நிறுவனம் மூலம், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, போக்குவரத்து துறையினர் முன்னறிவிப்பு இல்லாத வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பொதுமக்கள் பலர் பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். இதனையடுத்து போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து இன்று சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மீண்டும் ஜூன் 9ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.