பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கி பதிலடி கொடுத்தது. இதற்கு பாகிஸ்தான் இந்திய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கியது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தாக்குதல் போர் சூழல் நிலவியது. இதில் பாகிஸ்தான் படைகளுக்கு தலைமை தாங்கிய அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீருக்கு அந்நாட்டில் உயரிய பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதனால், அவர்மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், அமெரிக்காவுடனான ராணுவ மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அசிம் முனீர் ஐந்து நாள் பயணமாக அந்நாட்டுக்கு சென்றடைந்தார். ஆனால், அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர்களே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வாஷிங்டனில் அவர் தங்கியிருந்த ஹோட்டலை விட்டு வெளியேறியபோது அவருக்கு எதிராக பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தான் வம்சாவளியினரும் ஒன்றுகூடி ”பாகிஸ்தானில் உண்மையான ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள், “அசிம் முனீர், நீ ஒரு கோழை, உனக்கு அவமானம், நீ ஒரு வெகுஜனக் கொலைகாரன், நீ ஒரு சர்வாதிகாரி மற்றும் பாகிஸ்தானியர்களைக் கொன்றவன்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில், இன்று புதன்கிழமை மதியம் உணவு இடைவேளையின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை சந்திக்க உள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பயணத்திட்ட அறிக்கையின்படி, பாகிஸ்தான் ஜெனரலுடனான மதிய உணவு சந்திப்பு, ஜனாதிபதி டிரம்பிற்கு திட்டமிடப்பட்டுள்ள முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிரம்ப் மற்றும் முனீருக்கு இடையிலான சந்திப்பு பிற்பகல் 1 மணிக்கு வெள்ளை மாளிகையின் அமைச்சரவை மூடிய அறையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்பின் தினசரி பொது அட்டவணையின்படி, தலைவர்களுடனான சந்திப்பு மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெறும், அங்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, இந்த பயணத்தில் முனீர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Readmore: போர் பதற்றம்!. ஈரானில் வாட்ஸ் அப் பயன்படுத்த திடீர் தடை!. என்ன காரணம்?