“பிரான்ஸ் மீது 200% வரி விதிப்பேன்..” காசா அமைதி வாரியம் குறித்து மக்ரோன் கேள்வி எழுப்பியதால் டிரம்ப் மிரட்டல்..!

trump macron

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் தனது “அமைதி வாரியம்” (Board of Peace) என்ற தனது புதிய அமைப்பில் சேர மறுப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸை கடுமையாக தாக்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வைன் மற்றும் ஷாம்பேன் மீது 200 சதவீத சுங்கவரி (tariff) விதிக்கப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதே நேரத்தில், கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் எம்யூயல் மக்ரோன் தனக்கு அனுப்பிய தனிப்பட்ட செய்தியையும் டிரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ருத் சோஷியல்’ இல் வெளியிட்டுள்ளார்.


டிரம்பின் இந்த கடும் விமர்சனம், அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறிய கருத்துகளை மக்ரோன் கேலி செய்ததற்குப் பிறகே தொடங்கியது. கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்க வேண்டும் என்பதில் டிரம்ப் காட்டும் ஆர்வத்தை விளக்க முயன்ற பெசன்டின் விளக்கத்தை மக்ரோன் விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து டிரம்ப், பிரான்ஸை குறிவைத்து கடுமையான வர்த்தக மிரட்டல்களை விடுத்தார்.

பிரான்ஸ் குறித்து பேசிய டிரம்ப் “அவன் (மக்ரோன்) சேர்ந்தாக வேண்டாம் என்றால் வேண்டாம். ஆனால் நான் அவனது வைன் மற்றும் ஷாம்பேன் மீது 200 சதவீத வரி விதிப்பேன். அப்போது அவன் சேர்ந்துவிடுவான்,” என்று கூறினார்.

இந்த “அமைதி வாரியம்” முதலில் காசாவில் போர் காரணமாக சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் திட்டமிடப்பட்டது. ஆனால், அதன் விதிமுறைகள் இந்த அமைப்பு காசாவுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும் என்று எங்கும் குறிப்பிடவில்லை.

பின்னர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், மக்ரோன் அனுப்பிய ஒரு தனிப்பட்ட செய்தியையும் வெளியிட்டார். அந்தச் செய்தியில், ஈரான் மற்றும் சிரியா தொடர்பான விஷயங்களில் இருவருக்கும் ஒரே கருத்து இருப்பதாக மக்ரோன் கூறியிருந்தார். ஆனால், “நீங்கள் கிரீன்லாந்து விவகாரத்தில் என்ன செய்கிறாய் என்று எனக்கு புரியவில்லை” என்று அவர் டிரம்பிடம் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, மக்ரோன், டாவோஸில் நடைபெற உள்ள உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum), டிரம்ப் மற்றும் ஜி7 நாடுகளின் தலைவர்களை சந்திக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அந்த சந்திப்புக்கு உக்ரைன், டென்மார்க், சிரியா மற்றும் ரஷ்யா பிரதிநிதிகளையும் அழைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்பு, கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடுகளின் மீது, பிப்ரவரி மாதம் முதல் 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய எட்டு நாடுகள் இந்த வரியின் கீழ் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “கிரீன்லாந்தை முழுமையாக அமெரிக்கா வாங்குவதற்கான ஒப்பந்தம்” ஜூன் 1க்குள் நடைமுறைக்கு வராவிட்டால், இந்த வரி 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.

டிரம்ப் தொடர்ந்து தனது கூட்டணி நாடுகளையும், எதிரி நாடுகளையும் வளைத்துக்கொள்ள வர்த்தக வரிகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். இந்த அணுகுமுறை, 1949ல் தொடங்கப்பட்ட நேட்டோ கூட்டணியின் உறவை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. இந்த கூட்டணி, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கான கூட்டு பாதுகாப்பை வழங்கி வரும் முக்கிய அமைப்பாகும்.

கடந்த காலங்களிலும், டிரம்ப் வர்த்தக தண்டனைகளை பயன்படுத்தி பல நாடுகளை தனது நிலைப்பாட்டுக்கு வரச் செய்ய முயன்றுள்ளார். சில நாடுகள் முதலீட்டு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளன. ஆனால், சீனா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இந்த அணுகுமுறைக்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன.

அமெரிக்க சட்டத்தின் கீழ், டிரம்ப் இவ்வளவு பெரிய சுங்க வரிகளை எவ்வாறு விதிக்க முடியும் என்பது தெளிவாக இல்லை. இருப்பினும், பொருளாதார அவசர அதிகாரங்களை அவர் பயன்படுத்தக்கூடும். இந்த அதிகாரங்கள் தற்போது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டு வருகின்றன.

டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், சமீபத்தில் பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து பிரதிநிதிகள் கிரீன்லாந்து சென்றதற்கும், டென்மார்க் கட்டுப்பாட்டிலுள்ள அந்த அரை தன்னாட்சி பிரதேசத்தை அமெரிக்கா வாங்க வேண்டும் என்ற தனது முயற்சிக்கு பொதுவாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதற்கும் பதிலடியாகவே இந்த வரிகள் விதிக்கப்படுவதாக கூறினார்.

Read More : பிஎம் கிசான் உதவித்தொகை ரூ. 8,000 ஆக உயர்த்தப்படுகிறதா..? பட்ஜெட்டில் மத்திய அரசு முக்கிய முடிவு..!

RUPA

Next Post

“ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்ததே தவறு..” ஜனநாயகன் வழக்கில் சென்சார் போர்டு வாதம்..!

Tue Jan 20 , 2026
விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, […]
jananayagan high court

You May Like