மத்தியபிரதேச மாநிலம் முங்காவல்லி என்னும் கிராமத்தில் கடந்த 6 ஆம் தேதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்தார். சேகோர் மாவட்டத்திற்கு உட்பட்ட முங்காவல்லி கிராமத்தில் 6 ஆம் தேதி அன்று தனது வீடு அருகிலுள்ள பண்ணை நிலப்பகுதியில் சிருஷ்டி குஷ்வாகா என்கிற இரண்டரை வயது சிறுமி அங்கே மூடாமல் விடப்பட்டிருந்த 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். இதில் 30 அடி ஆழத்தில் சிறுமி சிக்கிக்கொண்டார். இதனையடுத்து சிறுமிக்கு தொடர்ந்து குழாய் வழியாக ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்தது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி ஆழ்துளை கிணறு அருகே குழி தோண்டி சிறுமியை மீட்க முயற்சித்து வந்தனர்.
அங்கு பாறை இருந்ததால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இதனை அடுத்து ரோபோ உதவியுடன் ஆழ்துளை கிணற்றிலிருந்து சிறுமியை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 55 மணி நேரம் போராடி சிறுமியை சுயநினைவில்லாத நிலையில் மீட்பு குழுவினர் மீட்டனர். அங்கே தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் குழந்தையை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, குழந்தை ஏற்கனவெ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விளையாடும் போது தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண் குழந்தை 2 நாட்களுக்கும் மேலாக போராடி மீட்ட பிறகு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.