தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது கூட்டணி வியூகங்களை இறுதி செய்வதில் வேகம் காட்டி வருகிறது. சமீபகாலமாக அதிமுக கூட்டணியில் சில விரிசல்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது இரு முக்கியக் கட்சிகள் தங்களது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
முதலாவதாக, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கதிரவன், வரும் தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியிலேயே சந்திக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நீண்டகாலமாக அதிமுகவுடன் இணக்கமான உறவைக் கொண்டுள்ள இந்தக் கட்சி, தேர்தலுக்கு முன்னதாகவே தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. இது தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க அதிமுகவுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொருபுறம், அதிமுக கூட்டணியில் நீடிப்பாரா மாட்டாரா என்ற பலத்த யூகங்களுக்கு உள்ளாகி வந்த புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தற்போது தனது மௌனத்தை கலைத்துள்ளார். முன்னதாக, ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்குப் பின்னரே கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிப்பதாக அவர் கூறியிருந்தது, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், இப்போது அதிமுக கூட்டணியிலேயே தொடர்வதை அவர் உறுதி செய்துள்ளார். மேலும், “எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பே எங்களது முதல் நடவடிக்கையாக இருக்கும்” என்ற நிபந்தனையுடன் அவர் கைகோர்த்துள்ளார்.
திமுக தலைமையிலான மெகா கூட்டணியை எதிர்கொள்ள, சிறு மற்றும் பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைப்பதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, பட்டியலின மற்றும் தென் மாவட்ட வாக்குக்களை கொண்ட இந்தக் கட்சிகளின் ஆதரவு உறுதி செய்யப்பட்டுள்ளது, தேர்தலுக்கு முந்தைய பலப்பரீட்சையில் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
Read More : ருசிக்கு அடிமையாகி ஆரோக்கியத்தை தொலைக்காதீங்க..!! புற்றுநோய் அபாயத்தை தூண்டும் 5 உணவுப் பழக்கங்கள்..!!



