ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாத 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது
2025–26 கல்வியாண்டு தொடங்கவிருக்கும் நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்கு மாற உள்ளனர். இந்த நிலையில், ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்று கூறி பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்தியா முழுவதும் உள்ள 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 5 தமிழக பல்கலைக்கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராகிங் தடுப்பு ஆன்லைன் உறுதிமொழிகளைச் சமர்ப்பிப்பதில் மாணவர்களும் பல்கலைக்கழகங்களும் கடுமையான விதிமீறலில் ஈடுபட்டதாக யுஜிசி தெரிவித்துள்ளது. பல ஆலோசனைகள், UGC ராகிங் எதிர்ப்பு ஹெல்ப்லைனின் அழைப்புகள் மற்றும் ராகிங் எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பின் வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், இந்த பல்கலைக்கழகங்கள் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பல்கலைக்கழகங்கள் 30 நாட்களுக்குள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து மாணவர்களும் தங்கள் ஆன்லைன் ராகிங் எதிர்ப்பு உறுதிமொழிகளைச் சமர்ப்பிப்பதை உடனடியாக உறுதிசெய்யவும். ராகிங் தடுப்பு இணக்க அறிக்கையை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்யவும். தங்கள் வளாகங்களில் ராகிங் செய்வதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.
காலக்கெடுவிற்குள் இணங்கத் தவறினால் கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது. அதன்படி இந்த பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் யுஜிசி மானியங்கள் மற்றும் நிதியை திரும்பப் பெறப்படலாம்… யுஜிசி வலைத்தளத்தில் இந்த பல்கலைக்கழக ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும். சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம்.
நோட்டீஸ் அனுப்பப்பட்ட முக்கிய நிறுவனங்கள்
நாளந்தா பல்கலைக்கழகம் (மத்திய பல்கலைக்கழகம், பீகார்)
ஐஐடி பம்பாய், ஐஐடி கரக்பூர், ஐஐடி ஹைதராபாத், ஐஐடி பாலக்காடு
எய்ம்ஸ் ரேபரேலி
இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூர் மற்றும் ரோஹ்தக்
இந்திய புள்ளிவிவர நிறுவனம், கொல்கத்தா
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், லக்னோ
இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம்
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்
சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தமிழ்நாடு
தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER), ஹைதராபாத்
ஆந்திரப் பிரதேசம், பீகார், கேரளா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள பல அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் இதில் அடங்கும்.
மாணவர் பாதுகாப்பு மிகவும் கவலைக்குரியது என்றும், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ராகிங் எதிர்ப்பு கட்டமைப்பை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் UGC செயலாளர் பேராசிரியர் மணீஷ் ஆர். ஜோஷி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ராகிங் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாதது மாணவர்களின், குறிப்பாக புதியவர்களின் பாதுகாப்பு மற்றும் மன நலனை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்த விதிகளை பின்பற்ற தவறிய நிறுவனங்களுக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சகத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் அனைத்து ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் யுஜிசி தெரிவித்துள்ளது.
Read More : ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. இறுதி பயணிகள் அட்டவணை 24 மணி நேரத்திற்கு முன்பே வெளியாகும்..