கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேர்ந்த சம்பத் (28), தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் போது மீட்பு பணிகளில் ஈடுபட நெல்லை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.
அப்போது அங்கு கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணுடன் சம்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஒரு முறை சம்பத் தனது சொந்த ஊரான கடலூருக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனியார் லாட்ஜ் ஒன்றை எடுத்து தங்க வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை அடுத்து அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், சம்பத் அதனை மறுத்துள்ளார். அதனால் மன அழுத்தத்தில் இருந்த இளம்பெண் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகார் கடலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையை சேர்ந்த நபர் இளம் பெண்ணிற்கு திருமண ஆசை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.