கொல்கத்தாவை சேர்ந்த 42 வயது ஆசிரியை மாலினி சர்க்கார், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த சூழலில், அர்ஜுன் மித்ரா மற்றும் சௌம்ய தாஸ் ஆகிய இரண்டு ஆசிரியர்களுடன் மாலினிக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு ஆசிரியர்களும் திருமணமானவர்கள். ஆரம்பத்தில் ரகசியமாக இருந்த இந்த உறவு, நாளடைவில் விபரீதமாக மாறியது. இருவரிடமும் பணத்திற்காக ஆசைப்பட்ட மாலினி, அவர்களுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்ட தொடங்கியதாக கூறப்படுகிறது.
பள்ளி நிர்வாகம் மற்றும் குடும்பத்தாரிடம் புகைப்படங்களை காட்டி விடுவேன் என மாலினி மிரட்டியதால், ஆத்திரம் அடைந்த அர்ஜுனும் சௌம்யும் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி, மாலினியை ஒரு நட்சத்திர உணவகத்திற்கு வரவழைத்து மது அருந்த வைத்துள்ளனர். பின்னர் போதையில் இருந்த அவரை காரில் ஏற்றி சென்று, ஆற்றுப்பாலம் ஒன்றில் இருந்து கீழே வீசி கொன்றுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து மாலினியின் உடல் கரை ஒதுங்கியபோதுதான் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
மாலினியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் இறப்பதற்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், அவரது உடலில் காயங்கள் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அர்ஜுன் மற்றும் சௌம்ய தாஸ் ஆகிய இருவரும் சிக்கினர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



