பள்ளி ஆசிரியர் ‘TO’ 160க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்.. நிறைவேறாமல் போன நடிகர் ராஜேஷின் கடைசி ஆசை..!!

actor rajesh 2

தமிழ் திரையுலகில் மென்மையான நடிப்புக்கும், சிந்தனையாளராகவும் பெயர்பெற்றவர் நடிகர் ராஜேஷ். ஒருபுறம் ஆசிரியர், மறுபுறம் எழுத்தாளர், அதே நேரத்தில் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். ஆனால், அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஆசை மட்டும் நிறைவேறாமல் போனது அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்…


மன்னார்குடியைப் பூர்விகமாகக் கொண்ட நடிகர் ராஜேஷ், தனது பள்ளிப்படிப்பை பல்வேறு இடங்களில் முடித்தார். அதன் பின்னர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.யு.சி கல்வியை முடித்ததையடுத்து, பச்சையப்பா கல்லூரியில் உயர்கல்விக்கு சேர்ந்தார். ஆனால் சில காரணங்களால் அவரால் கல்லூரி படிப்பை முடிக்க முடியவில்லை.

இருப்பினும் கல்வி மீதான ஆழ்ந்த விருப்பம் அவரை ஒரு ஆசிரியராகத் திசைமாற்றியது. 1972 முதல் 1979 வரை, சுமார் ஏழு ஆண்டுகள், புரசைவாக்கம் செயிண்ட் பால்ஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவல்லிக்கேணி கெல்லட் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றினார்.

சினிமா: பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சினிமாவில் நடிக்கவும் முயற்சி செய்து வந்தார். கதாநாயகன், துணை நடிகர், குணச்சித்திர கதாபாத்திரம் என எல்லாவற்றிலும் நடித்து வந்தார். இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அவள் ஒரு தொடர்கதை படத்தில் துணை நடிகராக நடித்தார். அதன் பின்னர் 1979 ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பின்னர் கே. பாலச்சந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதுவரை சுமார் 160 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 2024ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி – காத்ரீனா கைஃப் நடித்து வெளிவந்த ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைப்படம்தான் இவர் நடித்து வெளியான கடைசித் திரைப்படமாகும்.

நடிகர் ராஜேஷ் தமிழில் ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஒரு நாளிதழுக்காக முரண்களை பற்றிய ‘முரண் சுவை’ என்ற தொடரை எழுதியிருந்தார். இந்திரா காந்தி விஷயத்தில் பாதுகாவலர்களே கொலைகாரர்களாக மாறிய முரணைப் பார்த்த ராஜேஷ், ஹிட்லர், டால்ஸ்டாய், காமராஜர், செல்லம்மா பாரதி, ஐன்ஸ்டைன் என 52 வாரங்கள் பல்வேறு ஆளுமைகளைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் உலகின் சிறந்த திரைப்படங்கள், சிறந்த இயக்குனர்கள், நடிகைகள், நடிகை ஆட்ரே ஹெப்பர்னைப் பற்றிய புத்தகம் ஒன்று, ஜோதிடம், புரியாத புதிர் உள்ளிட்ட புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.

actor rajesh 1

பன்முக திறமை கொண்ட ராஜேஷ் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த போது, “உங்களுக்கு எந்த நடிகரின் பயோபிக்கில் நடிக்க ஆசை என நெறியாளர் கேள்வி கேட்க, யோசிக்காமல் நான் சிவாஜி கணேஷனாக நடிக்க ஆசை என கூறியிருந்தார். எம்ஜிஆர் ஆக நடிக்க எனது தோற்றம் ஒத்துழைக்காது, ஆனால் சிவாஜி கணேஷன் கதாபாத்திரத்திற்கு நான் கட்சிதமாக இருப்பேன் என கூறியிருந்தார்”. தற்போது அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் கடைசி ஆசை நிறைவேறாமல் போனதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read more: கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டதை வரவேற்கிறேன்..!! – பிரேமலதா விஜயகாந்த்

Next Post

இளைஞர்களை அதிகமாக பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோய்.. முதற்கட்ட அறிகுறிகள் இவைதான்..!! அலட்சியம் வேண்டாம்

Thu May 29 , 2025
பெருங்குடல் புற்றுநோய் இப்போது இளையவர்களையும் பாதிக்கிறது. தொடக்க நிலையில் காணப்படும் முக்கிய அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பெருங்குடல் புற்றுநோய் (Colon Cancer) என்று கேள்விப்பட்டாலே அது முதியவர்களுக்கே ஏற்படும் நோயென பலருக்கு தோன்றலாம். ஆனால் சமீபத்திய மருத்துவக் கணக்குகள் அதனை முற்றிலும் மறுக்கின்றன. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றங்கள் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெருங்குடல் புற்றுநோய் […]
Colon Cancer

You May Like