2026 ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நாகப்பட்டினம் புத்தூர் அண்ணா சிலை அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். தனது பேச்சில், “மீன் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாகையில், நவீன மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதை தட்டிக்கேட்பது நமது கடமை” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், மீனவர்கள் விவகாரத்தில் திமுக அரசு நாடகமாடுவதாக விமர்சித்த விஜய், “முதல்வரே, நான் நேரடியாக கேட்கிறேன், நீங்கள் மிரட்டிப் பார்க்கிறீர்களா? குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருக்கும் என்றால், சொந்தமாக உழைத்து சம்பாதிக்கும் எனக்கு எவ்வளவு இருக்கும்?” என்று கடுமையாக பேசினார்.
சுவர் விபத்து :
விஜய்யின் பேச்சை கேட்கவும், அவரை பார்க்கவும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், நாகை நகரம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றபோது, மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் மீது ரசிகர்கள் ஏறி அமர்ந்துள்ளனர். இதனால், சுற்றுச்சுவர் பாரம் தாங்க முடியாமல் இடிந்து விழுந்தது.
இந்த மண்டபம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமானது. இந்த விபத்து குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், “மண்டபத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல், ஆபாச வார்த்தைகள் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், தவெகவினர் மற்றும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : இனி சில நிமிடங்கள் போதும்.. டிரைவிங் லைசன்ஸில் ஃபோன் நம்பரை ஈசியா மாற்றலாம்..!! வழிமுறைகள் இதோ..!!



