சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் மத்திய அரசு ஒரு முக்கியத் திட்டத்தை அறிவித்துள்ளது. பிரதமர் இ-டிரைவ் (PM e-Drive) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான (EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்கப் பெரும் நிதி மானியத்தை மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
முக்கியப் பகுதிகளுக்கு முழு மானியம் :
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அத்தியாவசிய இடங்களில் ஊக்குவிக்கும் நோக்கில், அரசு அலுவலகங்கள், குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்கள் போன்ற பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க 100% மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு 80% மானியம் :
அதிக கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளான ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் சுங்கச் சாவடிகள் போன்ற இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க 80% மானியம் அளிக்கப்படும். மேலும், இந்த நிலையங்களுக்கான பொருட்கள் வாங்கிட 70% மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகள், விரைவுச் சாலைகள் மற்றும் சாலையோரங்கள் போன்ற போக்குவரத்து அதிகம் உள்ள வணிக மற்றும் பயணப் பகுதிகளிலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க 80% மானியம் வழங்கப்படும்.
திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு :
நாடு முழுவதும் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக, பிரதமர் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ. 10,900 கோடி நிதியில் இருந்து, சுமார் 72,300 சார்ஜிங் நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்குச் சுமார் ரூ. 2,000 கோடி செலவாகும் என மத்திய அரசு கணித்துள்ளது.



