ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம். இந்த பெளர்ணமி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கிழமைகளில் வரும். அந்த கிழமைகளுக்கு என்று தனி சிறப்பும் பரிகாரங்களும் உள்ளன.
அந்தவகையில், சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். இதேபோல், வைகாசி மாதத்தில் பௌர்ணமி பொதுவாக விசாக நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினம் தமிழ் கடவுளான முருகப் பெருமானின் பிறந்த தினமாகவும், புத்தர் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகின்றன. வைகாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட அறிவு மேம்படும். முருகனின் அருளால் ஞானம் கிடைக்கும்.
செவ்வாயன்று வரும் பௌர்ணமி முருகப் பெருமானுக்கு மற்றும் அங்காரகனுக்கு உகந்த தினமாகும். எனவே இந்த நாளில் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை நட்சத்திரக்காரர்கள், மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள், செவ்வாய் தோஷம், செவ்வாய் திசை நடப்பவர்கள் துர்க்கை அம்மனுக்கு சிகப்பு வர்ண வஸ்திரம் சாற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய அத்தனை எதிர்ப்புகளும் நீங்கும். செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும்.
அதன்படி, பவுர்ணமி நாளில் விரதம் இருந்து கிரிவலம் செல்ல உகந்த நேரம், இந்த நாளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோவிலில் இறைவனை வலம் வருதலைப் போல 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. இந்த கிரிவலப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.
மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ (நமசிவாய, சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்……) உச்சரிக்க வேண்டும். அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டுச் செல்லக் கூடாது.
வைகாசி பௌர்ணமி தினம் வருடம் முழுவதும் வரும் மற்ற பௌர்ணமி தினங்களை காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக இருக்கிறது. இன்று விரதம் அனுஷ்டித்தால் பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வ சேர்க்கை உண்டாகும். சிறப்பு வாய்ந்த இந்த வைகாசி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, உங்களின் விருப்பத்திற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். மாலை வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது.
மற்ற எல்லா தானங்களிலும் விட சிறந்த தானம் அன்னதானம் என்பது நமது நமது முன்னோர்களின் கருத்தாக உள்ளது. எனவே புண்ணியம் மிகுந்த இந்த வைகாசி பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களின் பாவ வினைகளை போக்கி புண்ணியத்தை உண்டாக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள், குறைபாடுகள் நீங்கும். பொருளாதார கஷ்ட நிலைகள் நீங்கி செல்வ சேர்க்கை உண்டாக்கும்.