பிரதமர் நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை என்று கூறிய ராஜேந்திர பாலாஜிக்கு விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில், ஆடித்திருவாதிரை திருவிழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராஜ ராஜ சோழனின் நாணயத்தை வெளியிட்டார்.. இந்த விழாவில் விசிக தலைவர் தொல், திருமாவளவன் பங்கேற்றார்.. பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.. அதிமுக கூட்டணியில் விசிக இணைய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்த நிலையில், விசிக இந்த அழைப்பை நிராகரித்தது..
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் என்ற முறையில் திரு.நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எமது விடுதலைச்சிறுத்தைகள் பேரியக்கத்தின் தலைவர் திரு. தொல். திருமாவளன் பங்கேற்றார். இதில் எந்த அரசியலும் இல்லை. தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்பது மரபாகவும்
நாகரீக அரசியலாகவுமே விடுதலைச்சிறுத்தைகள் பார்க்கிறோம்.
ஆனால்,அதிமுக முன்னாள் அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜி அவர்கள், “பிரதமர் மேடையில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை” என்று சொல்லியிருக்கிறார். இதில் எந்த திருப்புமுனையும் இல்லை. விடுதலைச்சிறுத்தைகள் எப்போதும் சனாதன எதிர்ப்பில் சமரசம் செய்யவே மாட்டோம்.
சனாதனத்தை நிறுவ முயலும் பாஜகவுடன் அரசியல் ரீதியான எந்த உறவும் வைக்க மாட்டோம் என எமது தலைவர் பிரகடனப்படுத்திய பிறகும் ஒருவித குழப்பம் மற்றும் நம்பிக்கையற்ற சூழலிலே அதிமுக இருப்பதை திரு.ராஜேந்திர பாலாஜி உணர்த்துகிறார். எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம்.
2026 ல் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தொற்கடிப்பார்கள் என்பது உறுதி. தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்துவரும் அதிமுக- பாஜகவை ஒரு போதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : கண்டு கொள்ளாத மோடி.. தவெக கூட்டணியில் இணையும் பாமக, தேமுதிக, ஓபிஎஸ் அணி..?