ஆரம்ப காலங்களில் இருந்தே வீரப்பனுடன் நெருக்கமாகவும், நம்பிக்கையுடனும் இருந்து வந்த வீரப்பனின் கூட்டாளி மீசை மாதையன் சுயநினைவு திரும்பாமலேயே காலமானார்.
கடந்த 1993ஆம் ஆண்டு வீரப்பன் குழுவிலிருந்து தப்பி வந்து கர்நாடக போலீசில் மீசை மாதையன் சரணடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, மீசை மாதையன் சரணடைந்ததும் நாடகம் என்று பரபரப்பாக பேசப்பட்டது. விசாரணையின் முடிவில் மீசை மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம், மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய 4 பேரின் ஆயுள் தண்டனையைத் தூக்குத் தண்டனையாக மாற்றியது. தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி வைத்தார். மீசை மாதையனின் கருணை மனுவை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார். சமூக ஆர்வலர்களின் போராட்டத்தை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அவர்கள் தண்டனையை உச்சநீதிமன்றம் குறைத்து, ஆயுள் தண்டனையாக மாற்றியது. கடந்த 2018 மே மாதம் சைமன் என்பவரும், 2022இல் பிலவேந்திரன் என்பவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரியில் ஞானபிரகாசம் பரோலில் வெளியே வந்தார். கடந்த 31 ஆண்டுகளாக மைசூர் சிறையிலிருந்த, மீசை மாதையன் கடந்த 11ஆம் தேதி அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு, நினைவிழந்த நிலைக்குச் சென்றார். முதல் கட்டமாக மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நிலைமை மேலும் கவலைக்கிடமாக ஆகவே, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீசை மாதையன் சுயநினைவு திரும்பாமலே நேற்று உயிரிழந்தார்.