நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏ. வேல்முருகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் முஸ்தபா எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அவரது ரசிகர் மன்றம் சார்பில், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கி வருகிறார். தன் குழந்தைகள் போல், விஜய் மாணவர்களுடன் நடந்து கொள்கிறார். பள்ளி படிக்கும் குழந்தைகள், விஜய்யை கட்டிப்பிடிப்பது, அன்பை மட்டுமே வெளிக்காட்டுகிறது.
ஆனால், இதை சில அரசியல் சக்திகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, அதை விமர்சித்து வேல்முருகன் அநாகரிகமாகவும், கொச்சைப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார். மாணவியரையும், அவரது பெற்றோரையும், அருவருக்கத்தக்க வகையில், கீழ்த்தரமாக பேசியிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகில்லை. ஒரு எம்.எல்.ஏ-வாக இருந்து கொண்டு பெண் குழந்தைகள் குறித்தும், அவர்களின் பெற்றோர்கள் குறித்தும் பொதுவெளியில் அநாகரிகமாக பேசியிருப்பது சட்டசபைக்கு, மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.