நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் கல்வி விழா குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வேல்முருகன் இருக்கும் இடம் தெரியாமல் போவது நிச்சயம் தவெகவின் இணை செயலாளரான தாஹிரா எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10, 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை பாதுகாப்பாக தங்க வைத்து, கல்வி விழாவில் பங்கேற்க செய்து, அவர்களைக் கவுரவித்து மீண்டும் அதே பாதுகாப்புடன் வழியனுப்பி வைப்பதை எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஆண்டுதோறும் தவெக தலைவர் விஜய் செய்து வருகிறார்.
மேடையில் ஆண் பெண் வேறுபாடின்றி, பெருங்கனிவு கொண்ட தந்தையைப் போல அன்பு காட்டி அரவணைக்கிறார். ஆனால், எம்.எல்.ஏ. பதவிக்காக ஏங்கி, அவர்களுக்கு விசுவாசம் காட்டும் விதமாக திமுக சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தரம் தாழ்ந்த, மனசாட்சியற்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளார். வீர மங்கை வேலு நாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலை எங்கள் கொள்கைத் தலைவர்களாக ஏற்றதே பெண்குலத்தின் மீது அவருக்கு எத்தகைய மரியாதை இருக்கிறது என்பதை காட்டுகிறது.
ஆனால், சட்டப்பேரவையில் சண்டமாருதமாக முழங்குவதாகத் தன்னைத் தானே புகழ்ந்துகொள்ளும் வேல்முருகனுக்கு, இதைப் பாலபாடமாக யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. வேல்முருகன் அவர்களே, தமிழகப் பெண்களையும், பெண் குழந்தைகளையும் அவமரியாதையாகப் பேச உங்களுக்கு எப்படி மனம் வருகிறது..? இதை திமுக துணைப் பொதுச்செயலாளரான கனிமொழி எப்படிக் கண்டும் காணாமல் மவுனமாக இருக்கிறார்..?
பெண்களை இழிவாகப் பேசும் மனநிலை கொண்டவர்களைக் கண்டித்திருக்க வேண்டாமா? அப்பா என்று தன்னை அழைத்து மகிழும் முதலமைச்சர் இதைக் கண்டித்திருக்க வேண்டாமா? இதற்கு திமுகவின் பதில் என்னவென்று தமிழகப் பெண்கள் உற்று நோக்கிக் கொண்டுள்ளனர். எனவே, தான் பேசியது தவறு என்பதை உணர்ந்து, தமிழகப் பெண்களிடம் வேல்முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் நடுங்கிப்போய் நிற்க வேண்டிய நிலை வரும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : “ஓஹோ.. கல்யாணமே பண்ணிட்டாங்களா”..? வைரலாகும் ரவி மோகன் – கெனிஷாவின் திருமண புகைப்படம்..?