பெண்ணை கொடூரமாக தாக்கி அறையில் அடைத்து வைத்து உணவு, தண்ணீர் கொடுக்காமல் தொடர்ந்து 5 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் பம்பில் என்கிற டேட்டிங் செயலி மூலம் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் ஜக்காரி மில்ஸ் என்கிற 21 வயது இளைஞனுக்கு பெண் ஒருவர் சாட்டிங் மூலம் பேசியுள்ளார். பின்னர் இருவரும் நன்றாக பேசிப் பழகிய பின்னர் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார் அந்த இளைஞர். விடுமுறை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீட்டில் தனியாக இருந்தபோது அந்த பெண்ணிடம் பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென்று அத்துமீறி பாலியல் உறவில் ஈடுபட முயன்றுள்ளார். அதற்கு அந்த பெண் சம்மதிக்காமல் இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், பெண்ணின் முகத்தில் கடுமையாக தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். முகம், கழுத்து பகுதியில் அந்த பெண்ணை கடித்து வைத்திருக்கிறார். பின்னர் ஸ்க்ரூ டிரைவர் ஒன்றின் பின்பகுதியில் அந்த பெண்ணை அடித்திருக்கிறார். இதில், பெண் பலத்த காயமடைந்து இருக்கிறார்.

பின்னர் 5 நாட்கள் அந்த பெண்ணை உணவு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் ஒரு அறையில் அடைத்து வைத்து தினமும் பலாத்காரம் செய்து வந்துள்ளார். பிறகு, ஒருகட்டத்தில் வீட்டில் அந்த இளைஞர் இல்லாததை அறிந்த அந்தப் பெண் தப்பித்து சாலையில் ஓடி இருக்கிறார் . அப்பகுதியில் வந்தவரிடம் தனக்கு ஏற்பட்ட நிலைமை சொல்லி அழுதுள்ளார். அதன் பின் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் ஜக்காரியை கைது செய்துள்ளனர். பின்னர் ரூ.41 லட்சம் செலுத்தி ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். வீட்டுக்காவலில் இருக்கும் அவர் விசாரணைக்கு அழைக்கும் போது நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.