நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டு வரவுள்ள புதிய விதிமுறைகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் கிடைக்கும் கடன் என்றால், அது நகைக்கடன் தான். நகைகளை வங்கியில் வைத்து கடன் வாங்குவது, இந்தியாவில் பொதுவாக உள்ள நடைமுறையாகும். பொருளாதார நெருக்கடி, மருத்துவ தேவை, விவசாய தேவை, சுபகாரியங்கள் என அவரவர் தேவைகளுக்காக நகைகளை அடகு வைக்கிறார்கள். இந்நிலையில் தான், ரிசர்வ் வங்கி நகைக்கடன் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு சமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
அதாவது, நகைக்கடன் வாங்குபவர் அதை மீட்கும் தகுதி உடையவராக இருக்க வேண்டும். தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த தரச் சான்றிதழ் வழங்க வேண்டும். குறிப்பிட்ட தங்கங்களை மட்டுமே அடமானமாக ஏற்கப்படும். தங்க நகையை அடமானம் வைக்கும்போது, அதன் உரிமையாளர்களுக்கான ஆதாரத்தைச் சமர்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தான், ”நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கி விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது” என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது என்றும் இதனால், கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் கூறியுள்ளார். மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி நகைக்கடன் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.”
தொடக்க வேளாண்மை கடன் வங்கிகள் ஆர்பிஐ-இன் கட்டுப்பாட்டின் கீழ் வராது. இதனால், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது. பாட்டன் பூட்டன் வாங்கிய நகையை வைத்து பணம் வாங்க ரசீது கேட்டால் எப்படி கொடுக்க முடியும்..? அதனால் தான் இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : இன்று வெள்ளிக்கிழமை..!! இந்த மந்திரத்தை சொன்னால் மகாலட்சுமியின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும்..!!