பாலிவுட் பழம்பெரும் தர்மேந்திரா, பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் வீட்டிலேயே சிகிச்சை பெறுவார் என்று பிரீச் கேண்டி மருத்துவமனையின் மருத்துவர் உறுதிப்படுத்தி உள்ளார்..
89 வயதான நடிகர் தர்மேந்திரா மருத்துவ பரிசோதனைக்காக பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 10 அன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார். இன்று (நவம்பர் 12) காலை சுமார் 7.30 மணியளவில் அவர் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாபி தியோல் தனது காரில் ஆம்புலன்ஸை பின்தொடர்ந்தார். காலை 7.00 மணிக்கு அவர் மருத்துவமனை வெளியே காட்சியளித்தார்.
தர்மேந்திராவின் மனைவி ஹேமா மாலினி ரசிகர்களிடம் தனது கணவர் விரைவான குணமடைவதற்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் தர்மேந்திராவின் மூத்த மகன் சன்னி தியோல், தந்தை நிலைமையாக உள்ளார் மற்றும் சிகிச்சைக்கு பதிலளிக்கிறார் என்று தெரிவித்தார்.
தர்மேந்திரா இறந்துவிட்டதாக பரவிய செய்தி
இதனிடையே நேற்று தர்மேந்திரா காலமானார் என்ற போலி செய்தி வைரலானதைத் தொடர்ந்து, அவரது மகள் ஈஷா தியோல் மற்றும் மனைவி ஹேமா மாலினி இருவரும் மூத்த நடிகர் நலம் பெறுகிறார் என்று தெரிவித்தனர்.
ஹேம மாலினி தனது பதிவில் “ இப்படி நடப்பது மன்னிக்க முடியாதது! சிகிச்சைக்கு நன்றாக பதிலளித்து, நலம் பெறும் ஒருவரை பற்றி பொறுப்புள்ள சேனல்கள் இப்படிப் போலி செய்திகளைப் பரப்புவது எப்படி? இது மிகவும் மரியாதையற்றதும், பொறுப்பற்றதுமான செயல். குடும்பத்தாருக்கும் அவர்களுடைய தனிமைக்குமான உரிமைக்கும் மரியாதை கொடுக்கவும்.” என்று கூறியிருந்தார்..
தர்மேந்திரா ஈஷா, சன்னி, பாபி தியோல் உள்ளிட்ட தியோல் குடும்ப உறுப்பினர்கள் அவரை அடிக்கடி சந்தித்தனர். அதே சமயம் சல்மான் கான், ஷாருக் கான், ஆமிர் கான் போன்ற முன்னணி நடிகர்களும் பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு நேரில் சென்று தர்மேந்திராவை நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..



