சேலம் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தாயுமானவர் திட்டம் கேப்டனுக்கு கிடைத்த வெற்றி. இந்த திட்டத்தை விஜயகாந்த் தனது முதல் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருந்தார். ஆனால், அப்போது பலர் கேலி செய்தார்கள். இப்போது அதே திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அதனால் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் தே.மு.தி.க. சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரேமலதா கூறினார்.
தேர்தல் நேரத்தில் நிறைய விதிமீறல்கள் நடக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. “அவர்களுக்கு வந்தால் ரத்தம்; மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” என்பதுபோல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கூட்டணியில் பங்கு பெறுபவர்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கும்போது யார் தவறு செய்தாலும் கேட்க முடியும். அதனால் கூட்டணி ஆட்சியை தே.மு.தி.க. வரவேற்கிறது.
ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்து பேசிய அவர், விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது ஸ்டாலின் தொடர்ந்து அவரை சந்தித்து விசாரித்தார். பதவி ஏற்கும்போதும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து ஆசி பெற்றனர். இது மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு. கலைஞர் கருணாநிதிதான் பிரேமலதா திருமணத்தை நடத்தி வைத்தார். அதனால் தங்கள் குடும்பத்திற்கும், ஸ்டாலின் குடும்பத்திற்கும் நல்ல நட்பு உண்டு. அரசியல் வேறு, குடும்ப நட்பு வேறு.
விஜயகாந்த், எம்.ஜி.ஆரை தனது மானசீக குருவாக நினைத்தார். அதனால்தான் எம்.ஜி.ஆர். பிரசார வாகனம் விஜயகாந்திடம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆரை தனது மானசீக குரு என கேப்டன் தெரிவித்ததுபோல கேப்டனை, ‘என்னுடைய அரசியல் குரு, மானசீக குரு’ என விஜய் அறிவிக்கட்டும், அதன்பிறகு அவருடைய படத்தைப் பயன்படுத்துவது குறித்து சிந்திக்கலாம்” என்று பிரேமலதா கூறினார். முன்னதாக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் விஜயகாந்த் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கூட்டணியில் இல்லாத கட்சிகள் கேப்டன் படத்தை பயன்படுத்தக் கூடாது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
Read more: சிறந்த செரிமானத்திற்கு சமைப்பதற்கு முன் ஊறவைக்க வேண்டிய 4 உணவுப் பொருட்கள்!. ஆரோக்கிய குறிப்புகள்!