புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்டப் பயணமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இன்று பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூரு – கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சரளைப் பகுதியில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட திடல், தொண்டர்களின் வெள்ளத்தால் திணறி வருகிறது. நெடுஞ்சாலைப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “திரைத்துறையில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு உச்ச நட்சத்திரம், அந்தப் புகழைத் துறந்துவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறாரோ, அவரே சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெறுவார். 2026-ஆம் ஆண்டில் தமிழகத்தை ஆளப்போவது விஜய்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று அவர் அதிரடியாகக் குறிப்பிட்டார்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சியுடன் விஜய்யின் வருகையை ஒப்பிட்டுப் பேசிய அவர், “மக்களுக்குப் பணியாற்ற ஒரு நல்ல தலைவர் வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் எண்ணம் இப்போது நிறைவேறியுள்ளது. ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆருக்குப் பிறகு, நான் இந்த ‘புரட்சித் தளபதி’ விஜயைத்தான் மக்களுக்கான தலைவராகப் பார்க்கிறேன். இது வெறும் அரசியல் கூட்டம் மட்டுமல்ல, வரும் தேர்தலில் மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பிற்கான ஒரு முன்னோட்டம். தமிழகத்தின் எதிர்காலம் இனி பிரகாசமாக மாறப் போகிறது” என்று ஆவேசமாக உரையாற்றினார்.
Read More : தாம்பத்திய வாழ்வில் உங்கள் துணைக்கு ஈடுபாடு இல்லையா..? அப்படினா இந்த டிரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!



