தமிழக சட்டமன்ற தேர்தல் களம் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, கூட்டணியில் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படும் தேமுதிக, தாங்கள் போட்டியிட விரும்பும் 13 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை திமுக மேலிடத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த கோரிக்கைப் பட்டியலில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய விருத்தாசலம் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளுடன், மதுரை மேற்கு தொகுதியையும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிக உறுதியாகக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. கேப்டன் விஜயகாந்த்தின் அரசியல் அடையாளமாக திகழ்ந்த இந்தத் தொகுதிகளை தங்களது கௌரவ பிரச்சனையாகவே தேமுதிக கருதுகிறது.
இருப்பினும், தேமுதிகவின் இந்த ‘சென்டிமென்ட்’ பட்டியலை ஏற்பதில் திமுக தரப்பில் சில தயக்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, விருத்தாசலம் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்குவதில் சில நிர்வாக சிக்கல்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைமை, அவற்றுக்குப் பதிலாக வேறு சில மாற்றுத் தொகுதிகளைப் பரிசீலிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
தங்களது கோரிக்கை முழுமையாக ஏற்கப்படாததால் பிரேமலதா விஜயகாந்த் சற்றே அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்தாலும், தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை என்பதே தற்போதைய கள நிலவரம். அறிவாலயத்திற்கும் தேமுதிக தலைமைக்கும் இடையே இன்னும் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பாக்கி இருப்பதால், இந்த இழுபறி விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : காலையிலேயே அதிர்ச்சி..!! அதிமுகவுடன் கூட்டணி இல்லை..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிடிவி தினகரன்..!!


