தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அரியலூர் மாவட்ட அதிமுகவின் முக்கிய தூணாக கருதப்பட்ட கவிதா G. ராஜேந்திரன், அக்கட்சியிலிருந்து விலகி ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ இணைந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் மாவட்ட செயலாளர், மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் என 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்புகளை வகித்த ஒரு மூத்த நிர்வாகி, தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்திருப்பது, அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்த இணைவு விழாவின் போது, கவிதா ராஜேந்திரனுக்கு பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்ற தவெக தலைவர் விஜய், தேர்தல் களப்பணிகளில் உடனடியாக தீவிரம் காட்டுமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளார். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அதிமுகவில் அடிமட்ட தொண்டர்கள் வரை அறிமுகமான ஒரு நபர் வெளியேறியிருப்பது, அதிமுகவுக்கு அந்த மாவட்டங்களில் ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
கட்சியில் இணைந்துள்ள கவிதா ராஜேந்திரனுக்கு, அரியலூர் மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் தவெகவின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உறுப்பினர் சேர்க்கை இயக்கம் மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் அனுபவமிக்க நிர்வாகிகளின் பங்களிப்பு அவசியம் என்பதால், விஜய்யின் இந்த ‘மூவ்’ (Move) மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Read More : பயனர்களின் குரலை பதிவு செய்ததற்காக ரூ. 570 கோடி செலுத்த உள்ள கூகுள்..! இந்த பணம் யாருக்கு கிடைக்கும்?



