நடிகர் விஜய்க்கு,நீண்ட கால நிழலாக இருந்த முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் தற்போது ஒரு பெரும் புயலை கிளப்பியுள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியப் பங்கு வகித்தவர், தற்போது திமுகவில் இணைந்துள்ள நிலையில், விஜய்யின் அரசியல் ஆளுமை குறித்து முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைவரையும் அதிர வைத்துள்ளன.
இதுகுறித்து பேசிய செல்வகுமார், “விஜய் ஒருபோதும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் அல்ல. திரைத்துறையில் ஒரு படம் தோல்வியடைந்தால், அந்தத் தயாரிப்பாளரை சந்திக்கக்கூட விஜய் முன்வரமாட்டார். தோல்வியடைந்தவர்களை தனது பாதையிலிருந்து அடியோடு நீக்கிவிடுவார் என்று தெரிவித்தார். விஜய்க்கு தோல்வி என்பது கசப்பான ஒன்று என்பதால், இக்கட்டான சூழலில் அவர் யாருக்காகவும் தோள் கொடுக்க மாட்டார் என செல்வகுமார் கூறியுள்ளார்.
மேலும், கட்சிப் பணிகளுக்காக சொந்தப் பணத்தைச் செலவிடும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அவர், தேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லாவிட்டால் விஜய் தனது அரசியல் பொறுப்புகளை உதறிவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார் என கூறியுள்ளார். பகிர்ந்துள்ளார். “அரசியல் என்பது நீண்ட காலப் போராட்டம், ஆனால் பின்னடைவு ஏற்பட்டால் விஜய் மக்களை விட்டு விலகிவிடுவார். அவரிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.



