2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
விஜய் சுற்றுப்பயணத்திற்கு 21 நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது.. குறிப்பாக விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.. ஆனால் விஜய்யின் பிரச்சார வாகனத்தை நூற்றுக்கணக்கான தொண்டர்கள், கார் பைக் மூலம் பின் தொடர்ந்து செல்கின்றனர்.. விமான நிலையத்திற்கு தொண்டர்கள் யாரும் வர வேண்டாம், விஜய் பேசும் இடத்திற்கு வந்தால் போதும் என்று அக்கட்சி தலைமை அறிவுறுத்தி இருந்தது.. ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஏராளாமான தொண்டர்கள் விமான நிலையம் முன்பு கூடியிருந்தனர்.. மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு சென்றிருக்கிறார்.. இதனால் விஜய்யின் பிரச்சாரம் பெரும் ஊர்வலம் போல் மாறியது..
இதனால் திருச்சியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. காலை 10.30 மணி விஜய் மரக்கடை பகுதியில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 2 வரை விஜய் அந்த இடத்திற்கே சென்றடையவில்லை.
இந்த நிலையில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ள மரக்கடையில் வெயிலின் தாக்கம் காரணமாக தொண்டர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுமார் 5000 பேர் கூடியிருக்கும் நிலையில், இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. தவெக சார்பில் தொண்டர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆம்புலன்ஸில் இவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது. காலை முதலே கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் உணவு, தண்ணீர் இல்லாமல் அதிகளவில் மயக்கம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.