தான் வீட்டுக்கு செல்லாததால் மனைவி கோபமாக இருப்பதை காரணம் காட்டி விடுமுறை கேட்டு உயரதிகாரிக்கு காவலர் ஒருவர், எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசம் காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர், இவர் இந்தோ-நேபாள எல்லையின் பி.ஆர்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். விடுமுறை கிடைக்காததால், இவரால் வீட்டுக்கு செல்ல முடியவில்லை. இதனால், அவரது மனைவி மிகவும் கோபமடைந்துள்ளார். இதனையடுத்து, எனது மனைவி கோபமாக இருக்கிறார் எனவே விடுமுறை தரும்படி காவல்துறை உயரதிகாரிக்கு காவலர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “எனக்கு விடுமுறை கிடைக்காதால் கோபமான என் மனைவி என்னுடன் போனில் பேசுவதில்லை. நான் பலமுறை போனில் அழைத்தேன்… ஆனால், அவர் தனது தாயிடம் போனை கொடுத்து விடுகிறார்.

எனது மருமகனின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வருவேன் என்று எனது மனைவிக்கு உறுதியளித்துள்ளேன். ஆனால், விடுமுறை இல்லாமல் என்னால் வீட்டுக்கு செல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார். விண்ணப்பத்தை படித்த உதவி கண்காணிப்பாளர், அந்த காவலருக்கு ஜனவரி 10 முதல் 5 நாள் சாதாரண விடுப்புக்கு ஒப்புதல் அளித்தார். மேலும், கடைமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு அவர்களின் தேவைக்கேற்ப விடுமுறை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விடுப்பு காரணமாக எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என தெரிவித்தார்.